2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெகவோ சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்ததால், அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பியதாகக் கூறப்பட்டது.
ஆனால், சிவி சண்முகம் உட்பட சிலர் மட்டும் எடப்பாடியிடமே திரும்பி செல்வதா? தவெகவில் ஐக்கியமாவதா? அல்லது புதிய கட்சியை உருவாக்குவதா? என இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், சி.வி.சண்முகம் இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் நடந்த இந்த சந்திப்பு, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன என்றும், எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே எடப்பாடியிடம் மன்னிப்புக் கேட்டு இணைந்துவிட்டார், எதற்காக தற்போது சிவிஎஸ்-ஐ சந்தித்து இருக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கர் விலகியுள்ள நிலையில், அவர் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகையச் சூழலில், அதிமுக மூத்த நிர்வாகிகளின் இந்த சந்திப்பு, எடப்பாடியை கொதிப்படைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? கட்சியை கட்டுக்குள் வைத்துக் கொள்வாரா? என்ற் கேள்விகள் எழுந்துள்ளன.
மறுபக்கம், கூட்டாக சேர்ந்து ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்து தேர்தலை சந்திக்க போகிறார்களா? அல்லது அரசியலே வேண்டாம் என்று ஒதுங்குவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



