DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" – கேப்டன் ரஹானே

Spread the love

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே-8)நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 143 என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி.

இதில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார், தொடரின் ஆரம்பத்தில் கொல்கத்தா அணி கடைசி இடத்திலேயே இருந்தாலும், அடுத்தடுத்த வெற்றியின் மூலம் தற்போது பாயிண்ட்ஸ் டேபிலில் ஆறாவது இடத்தை அலங்கரித்து அமர்ந்திருக்கிறது.

கொகத்தா அணி
கொகத்தா அணி

இந்த வெற்றி குறித்து பேசிய அணியின் கேப்டன் ரஹானே, “முதலில், ஃபின் ஆலனை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். அவர் கடந்த ஐந்து போட்டிகளில் மிகவும் சிரமப்பட்டார், கடுமையாக உழைத்தார். ஆனால் இன்று அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதம்.

அதேபோல், எங்கள் பந்துவீச்சாளர்களைப் பாராட்ட விரும்புகிறேன். அவர்களால்தான் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். அவர்கள் தொடர்ந்து மிகச்சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்கள், குறிப்பாக அந்த மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரைன், வருண் மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டனர்.

ஃபீல்டிங்கில் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளர் எங்களிடம் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். அதுதான் எங்களுக்கு உதவி வருகிறது. இந்த பெருமை எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளரையே சேரும்.

ஒரு கேப்டனாக, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் எங்கள் அணியில் இருப்பதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்களிடம் நீங்கள் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

கொகத்தா அணி
கொகத்தா அணி

நரைன் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கற்றுக்கொள்கிறார், பயிற்சியில் கூட அவர் அங்கேயே கவனமாக இருப்பார், மற்ற வீரர்களிடமிருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பார். தனது அனுபவத்தை எல்லாரோடும் பகிர்ந்து கொள்கிறார்.

களத்தில் அது எனக்கும் உதவியது. நாங்கள் ஐந்து போட்டிகளாகவே மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். கிரிக்கெட்டில் அந்த தருணங்கள் மிகவும் முக்கியம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *