Doctor Vikatan: கோடையின் தாக்கம்… முதியவர்கள் செய்யக் கூடாததும் செய்ய வேண்டியதும்!

Spread the love

Doctor Vikatan: இந்த வருடம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இள வயதினரே இதைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இந்நிலையில், முதியவர்கள் உள்ள வீடுகளில் அவர்களை எப்படிப் பார்த்துக்கொள்வது… அவர்களுக்கான பிரத்யேக வழிகாட்டல், மருத்துவ ஆலோசனைகள் ஏதும் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

இந்த ஆண்டு குளிர்காலம் எந்த அளவிற்குக் கடுமையாக இருந்ததோ, அதே அளவிற்கு கோடைக்கால வெப்பமும் மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ஏப்ரல் மாத வெயிலே உணர்த்தியிருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மிகவும் கொடுமையாக இருப்பதை நாம் அனுபவித்து வருகிறோம்.

இந்தக் கோடைகாலம் அனைவருக்குமே சவாலானதுதான் என்றாலும், முதியவர்களுக்கு இது  இன்னும் அதிக சவாலானதாக இருக்கும். அவர்கள் மிகுந்த கவனத்தோடு இந்த நாள்களைக் கடக்க வேண்டும்.  மிக முக்கியமாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதியவர்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் பேருந்து அல்லது ஆட்டோ போன்ற திறந்தவெளி வாகனங்களில் பயணம் செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கலாம்.  வெப்பம் அதிகரிப்பதால் எல்லோருக்குமே, டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர் இழப்பு பிரச்னை ஏற்படும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடித்து, நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) பாதிக்கும் அபாயம் அதிகரிக்கும். அதன் விளைவாக உடலில் சோடியம் அளவு குறையும். இதை
ஹைப்போநெட்ரீமியா (Hyponatremia) என்று சொல்வோம்.

ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) பாதிக்கும் அபாயம் அதிகரிக்கும். அதன் விளைவாக உடலில் சோடியம் அளவு குறையும். இதை 
ஹைப்போநெட்ரீமியா (Hyponatremia)  என்று சொல்வோம்.  அப்போது நினைவு தப்பிப் போகும் நிலை ஏற்படும். இது பக்கவாதம் (Stroke) போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும் என்பதால் பலருக்கும் குழப்பம் ஏற்படலாம்.  பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து டெஸ்ட் செய்யும்போது, அவர்களுக்கு எலக்ட்ரோலைட்ஸ் குறைபாடு ஏற்பட்டிருப்பது தெரியவரும். அதாவது,  சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் போன்ற தாதுக்கள் குறைவதால் நோயாளிகளை ஐசியூ-வில் (ICU) வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை கூட ஏற்படலாம்.

இந்த நிலை ஏற்படாமல் இருக்க, காலையிலும் மாலையிலும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிப்பது நல்லது.  மாலை நேரங்களில் உடல் சோர்வாக இருந்தால், எலக்ட்ரால்  (Electral)  பவுடரைத் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  வீட்டிற்குள் வெப்ப அலை வீசாமல் இருக்க ஜன்னல்களில் திரைச்சீலைகள் (Screens) போடலாம். ஏசி பயன்படுத்துபவர்கள் பகல் முழுவதும் 26 டிகிரி வெப்பநிலையில் அதை ஓடவிடுவது சிறந்தது. கோடை வெயிலிலிருந்து தப்பிக்க முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *