Doctor Vikatan: தோள்பட்டையிலிருந்து விரல்களுக்கு இறங்கும் வலி… எப்படிப்பட்ட சிகிச்சை தேவை?

Spread the love

Doctor Vikatan:  எனக்கு தோள்பட்டையில் வலி இருக்கிறது.  தவிர வலது கை மற்றும் விரல்களிலும் வலி இருக்கிறது. மொபைல்  பார்க்க முடியாத அளவுக்கு வலி இருக்கிறது.  இதற்கு எப்படிப்பட்ட சிகிச்சை எடுக்க வேண்டும்… பிசியோதெரபி தேவையா?

– மகேந்திரன், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

எலும்பியல்  சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு
எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது ‘செர்வைகல் ஸ்பாண்டிலோசிஸ்’  (Cervical Spondylosis) எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானம் பாதிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது.

கழுத்திலுள்ள எலும்புகள் தேய்மானமடைந்து, அருகில் உள்ள நரம்புகளைத் தொடுவதால் அல்லது அழுத்துவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கழுத்திலிருந்து கை வரை வலி பரவலாம் மற்றும் கைகளில் மரத்துப்போதல் (Numbness) ஏற்படலாம். 

இது வயது முதிர்வின் காரணமாக ஏற்படலாம். அதுமட்டுமன்றி, நாம் உட்காரும் முறை (Posture), உறங்கும்போது இரண்டு, மூன்று தலையணைகளை வைத்துக்கொள்வது மற்றும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றாலும் இந்தப் பாதிப்பு வரக்கூடும்.

நீங்கள் முதலில் எலும்பு முறிவு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும். ஆரம்பகட்டமாக எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்த்துவிட்டு, பிசியோதெரபி (Physiotherapy) செய்ய வேண்டும்.

பிசியோதெரபியில் முன்னேற்றம் இல்லையெனில், எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கும். நிலைமை தீவிரமாக இருந்தால், அடுத்தகட்டமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை (Spinal Surgery) தேவைப்படலாம்.

படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இந்தப் பிரச்னையின் பாதிப்பிலிருந்து மீள சில விஷயங்களை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொபைல் அல்லது கணினியைப் பயன்படுத்தும்போது தலையைக் குனியாமல், கண் மட்டத்திற்கு (Eye level) நேராக வைத்துப் பார்க்க வேண்டும். படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிக உயரமான தலையணைகளைத் தவிர்த்து, கழுத்தின் வளைவுக்கு ஏற்ற மெலிதான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் 30-45 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய இடைவேளை எடுத்து கழுத்து அசைவுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தலையிலோ அல்லது தோளிலோ அதிக எடையுள்ள பொருள்களைச் சுமப்பதைத் தவிர்க்க வேண்டும்.

டாக்டர் ரமேஷ்பாபு:

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்பாட் மருத்துவமனையின் இயக்குநர். எலும்பியல் மருத்துவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *