களத்தூர் சுகநாதேஸ்வரர் திருக்கோயில்: நோய்கள் தீரும்… சுக வாழ்வு கிடைக்கும்!

Spread the love

வியாசரின் மகனான சுகப்பிரும்ம ரிஷி பூஜித்த சிவத்தலங்கள் மிகவும் மகிமை வாய்ந்தவை. அவற்றில் சேலத்தில் இருக்கும் சுகவனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. அதற்கு இணையான மற்றொரு தலம் களத்தூர்.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆவலூரில் இருந்து இடது பக்கம் திரும்பி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. சென்றால் களத்தூரை அடையலாம்.

‘ஜயங்கொண்ட சோழ மண்டலத்து தாமல் கோட்டத்து, தாமல் நாட்டு, விக்ரமசிங்க சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் மிகப் பழைமையான கிராமம் இது.

கி.பி. 540-ம் ஆண்டில் களப்பிரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிறகு பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பல ஆட்சியாளர்கள், இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.

களத்தூர் சுகநாதேஸ்வரர் கோயில்
களத்தூர் சுகநாதேஸ்வரர் கோயில்

களத்தூர் பிரதான சாலையில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். கோயில் பிராகாரத்தை வலம் வரும்போது, தென் கிழக்கு மூலையில் சூரியன் மேற்கு நோக்கியும், தென்மேற்கு மூலையில் ஸ்ரீகணபதியும், மேற்குப் பிராகாரத்தின் நடுவில் நாகங்களும், அதையடுத்து ஸ்ரீகயிலாசநாதரும், அடுத்து முருகப்பெருமானும், வட மேற்கு மூலையில் ஷண்முகரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

அருகில் தேவியர் இருக்க, மயில்மீது அமர்ந்திருக்கிறார் ஸ்ரீஷண்முகர். மயிலானது சற்று வித்தியாசமாக, தலைப்பகுதியை ஷண்முகரின் இடப்பக்கத்திலும் தோகையை அவரின் வலப் பக்கத்திலும் வைத்தபடி நிற்கிறது. அடுத்து, நவகிரக சந்நிதியும் பைரவர் சந்நிதியும் இருக்க, கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதிருமால், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை ஆகியோர் காட்சி தருகின்றனர்.

இங்கே, ஸ்ரீசண்டிகேஸ்வரரும் சற்றே வித்தியாசமாகக் காட்சி தருவது சிறப்பு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருவாசியுடன் கூடிய சிலையில், சிங்கம் ஒன்று வாலைக் குழைத்துக்கொண்டு அம்மனின் காலடியில் கிடக்கிறது.

களத்தூர் சுகநாதேஸ்வரர்
களத்தூர் சுகநாதேஸ்வரர்

தாமரைப் பீடத்தில் நிற்கிறாள் ஸ்ரீதுர்கை. வலது காலை சற்று முன்னே நகர்த்தி, ஒய்யார மாகக் காட்சி அருள்கிறாள் அன்னை. எண்கரங்களில் மரயோகச் சக்கரம், சங்கு, சூலம், கேடயம், வில், அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு, வலது திருக்கரத்தில் கிளியையும் ஏந்தியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. பல்லவர் காலத்து பொக்கிஷம் இந்தத் திருமேனி!

கருவறையில், ஸ்ரீசுகநாதேஸ்வரரின் லிங்கத் திருமேனி கொள்ளை அழகு. பாணம் உயர்ந்தும், வட்ட வடிவ ஆவுடையாராகவும் காணப்படும் திருமேனியைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

கிளி முகம் கொண்ட முனிவர் பூஜித்த சிவலிங்கம் எனத் தல புராணம் தெரிவிக்கிறது. கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு பகவானின் சந்நிதிக்கு மேலே உள்ள மகர தோரணத்தில் அழகிய காட்சி ஒன்று தென்படுகிறது. கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர், தேர் ஒன்றில் சிவலிங்கத்தை வைத்து இழுத்து வருவது போன்ற காட்சி அது.

தேருக்கு அருகில் மன்னன் ஒருவன் நிற்கிறான். தொண்டை மண்டல சதகத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனாரைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அவர், தென்காந்தைப் பகுதியை ஆட்சி செய்தார் என்பார்கள். இங்கே, தேருக்கு அருகில் நிற்பது, அந்த மன்னர் கூற்றுவ நாயனாரே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொள்ளை அழகுடன் காட்சி தரும் உத்ஸவ மூர்த்திகள் சோழர் காலத்தவை. இங்கே உள்ள திரிசூலத்தில், ரிஷபாரூடராக சிவ-பார்வதி காட்சி தருவது காணக் கிடைக்காத ஒன்று. திரிசூலத்தில் காட்சி தரும் ரிஷபாரூடரை வேறு தலத்தில் காண்பது அரிது என்கிறார்கள்.

சுகபிரம்ம மகரிஷி
சுகபிரம்ம மகரிஷி

பல்லவர் காலத்துக் கோயில்களில் அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இருக்காது. பின்னர் வந்த மன்னர்கள் அம்பிகைக்குச் சந்நிதி ஏற்படுத்தினார்கள். இங்கே, ஸ்ரீசௌந்தரவல்லி அம்பாள், முகமண்டபத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள்.

இன்றைக்கு, மனநோயாலும், மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலியாலும் பலர் துன்புறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்தத் தலம் வந்து ஈசனை வழிபட்டுச் சென்றாலே அவர்களின் நோய் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை களத்தூர் சென்று சுகநாதேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் வந்து சேரும்.

குறிப்பு : இங்கே, ஸ்ரீசுகநாதர் கோயில் மேற்குப் பிராகாரத்தில் கயிலாசநாதருக்கு சந்நிதி உள்ளது. தனிக்கோயிலாக ஸ்ரீகயிலாசநாதர் கோயிலும் உள்ளது. சுகநாதர் கோயிலில் ஷண்முகர் சந்நிதியும், கயிலாசநாதர் கோயிலில் முருகப் பெருமான் சந்நிதியும் உள்ளது.

தவிர, கந்தனுக்குத் தனிக்கோயிலும் இங்கே உள்ளது. எனவே, தொட்டிக்கலை ஸ்ரீசுப்ரமணிய முனிவர் குறிப்பிடும் திருவாவினன்குடி, களத்தூராக இருக்கலாம் என்கின்றனர் பக்தர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *