இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். இதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை பல ஆயிரம் செலவு செய்து வாங்கி பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நிறுத்தி வைப்பர்.
வளைகுடா நாடுகளில் ஒட்டகம் பலியிடப்படுவதுண்டு. பங்களாதேஷில் ஒரு எருமை காளைக்கு டொனால்டு ட்ரம்ப் என்று பெயரிட்டு பக்ரீத் பண்டிகைக்காக அதன் உரிமையாளர் ஜியா உதின் என்பவர் வளர்த்து வந்தார். இந்த மாட்டிற்கு டொனால்டு ட்ரம்ப் சூட்டப்பட்டு இருந்ததால் அது சமூக ஊடங்களில் பெரிய அளவில் வைரலானது. பக்ரீத் பண்டிகைக்கு டொனால்டு ட்ரம்ப் மாடு பலியிடப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பான செய்திகள் பரவியதால் அந்த மாட்டை பார்க்க தினமும் ஏராளமானோர் ஜியா வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். இது குறித்து பொதுமக்களின் ஆர்வம் பெருகி வந்த நிலையில், அரசு அதிகாரிகள் கடைசி நேரத்தில் இதில் தலையிட்டனர்.

பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது, எருமை மாட்டை காப்பாற்றவும், அதனை வாங்கியவருக்கு அந்த பணத்தைத் திரும்பப் கொடுக்கவும், அரசாங்க பராமரிப்பின் கீழ் டாக்காவில் உள்ள தேசிய மிருகக்காட்சிசாலைக்கு மாற்றவும் உத்தரவிட்டார். இதையடுத்து அரசு அதிகாரிகள் உடனே விரைந்து செயல்பட்டு அந்த மாட்டை விலைக்கு வாங்கி, டாக்காவில் உள்ள வங்கதேச தேசிய உயிரியல் பூங்காவிற்கு மாற்றினர். அங்கு அந்த விலங்கு பலியிடப்படுவதற்குப் பதிலாக, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் 700 கிலோ எடை கொண்ட அந்த எருமை மாட்டை அரசே வாங்கியது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், “பாதுகாப்புச் சார்ந்த கவலைகள் மற்றும் பொதுமக்களின் வழக்கத்திற்கு மாறான அளவிலான ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக, கடைசித் தருணத்தில் அந்த எருமையை பலியிடுவதிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது,” என்று தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள அந்த மாட்டை பாதுகாப்பதற்கும், பார்வையாளர்கள் அதனைப் பாதுகாப்பான முறையில் காணும் வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.