த.வெ.க. அரசு பொறுப்பேற்ற உடன் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையிலும், அதற்கு மிக அருகிலேயே இருக்கும் ‘எஃப்.எல்.-2’ பார்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் மொத்தமிருந்த 284 டாஸ்மாக் மதுபானக்கடைகளில், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் விதிமுறைக்கு உட்பட்ட 69 கடைகள் மூடப்பட்டன. அதேசமயம் ரத்தினபுரி, புலியகுளம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குள் 500 மீட்டருக்குள் இருக்கும் ‘எஃப்.எல்.-2’ பார்கள் மூடப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் அந்த பார்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
எஃப்.எல்.-2 என்பது “Non-Proprietary Club” நடத்துபவர்களுக்கு வழங்கப்படும் உரிமம். இந்த உரிமம் மூலம் கழகத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்கலாம்.
எளிமையாக சொன்னால், பொது மக்களுக்கு மது வகைகள் வழங்க முடியாது், members-only club போல் இயங்கும் இடங்களுக்கு மட்டுமே இந்த உரிமம் பொருந்தும்.

இந்த நிலையில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதால் வரும் சட்ட சிக்கலை தவிர்க்க, புலியகுளம் பகுதியில் உள்ள ’சன்ரைஸ் கிளப்’ என்ற ‘எப்.எல்.-2’ பார் ஒரு நூதன முயற்சியை செய்து வருகிறது.
இதன்படி உறுப்பினர் அல்லாத மதுப்பிரியர்களிடம் ஆதார் அட்டை அல்லது டிரைவிங் லைசன்ஸ் ஜெராக்ஸ் பெற்றுக் கொண்டு, ‘FOR சன்ரைஸ் கிளப் கோவை’ என்ற முத்திரை வைக்கப்பட்ட ஒரு டோக்கன் அந்த பார் ஊழியர்கள் தருகிறார்கள். அதனை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
ஒருவேளை அந்த துண்டு சீட்டு தொலைந்து விட்டால் மீண்டும் ஆதார் அல்லது லைசன்ஸ் ஜெராக்ஸ் தந்து, மீண்டும் டோக்கன் பெற வேண்டும் என கூறியுள்ளனர். இந்த பகுதியில் இருந்த 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரியர்களும் இந்த பாரில் ஜெராக்ஸ் தந்து டோக்கன் பெற்று மதுபானங்களை பெற்று செல்கின்றனர்.