கண்ணாடி உடைஞ்சா அதைத் தூக்கிப் போடுவோம்… ஆனா, அதையே கலையாக மாற்றினால்? பொதுவாக உடைந்த கண்ணாடி என்றாலே அது தேவையில்லாத பொருளாகத்தான் பார்க்கப்படும். ஆனால், அந்த உடைந்த கண்ணாடியையே ஒரு கலைப்படைப்பாக மாற்றி வருகிறார்கள் பொள்ளாச்சியை சேர்ந்த இரு நண்பர்கள் பாலமுருகன் மற்றும் சந்தோஷ் குமார்.
நட்பில் தொடங்கி, கலையில் இணைந்த பயணம்.!
ஒரு வருடம் கற்றுக்கொண்ட திறனை வைத்து, இன்று 100-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஓவியங்களை உருவாக்கி வருகிறார்கள்.
இருவரும் முன்பு வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தபோதுதான் நண்பர்களாகியிருக்கிறார்கள். பின்னர், தங்களுக்குத் தெரிந்த ஓவியத் திறனை வைத்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்திருக்கிறது.
“நாங்க ஆரம்பத்துல பென்சில் ஆர்ட் பண்ணிட்டு இருந்தோம். அதிலேயே கிடைத்த அனுபவத்தோடு, புதுசா ஏதாவது ஸ்டார்ட் பண்ணலாம் என்று நினைச்சோம். அப்படித்தான் “இமைக்கா’ என்ற பெயரில் ஆர்ட் ஸ்டூடியோவைத் தொடங்கினோம்.”
வீட்டிலிருந்து தொடங்கிய வேலை… ஸ்டூடியோவாக மாறிய பயணம்!
ஆரம்பத்தில் இவர்களது வேலை வீட்டிலிருந்தே நடந்திருக்கிறது. கமிஷன் அடிப்படையில் ஆர்டர்களை எடுத்து செய்து வந்துள்ளனர். அந்தப் பணியில் கிடைத்த அனுபவமும், தங்களுடைய ஓவியத் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, அடுத்தகட்டமாக சொந்தமாக ஒரு ஆர்ட் ஸ்டூடியோ தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.

ஸ்டூடியோவுக்கு மாத செலவு தனியாக சமாளிப்பதைவிட இருவரும் இணைந்து செய்யலாம் என்று முடிவு செய்து. ஆளுக்கு பாதி என வாடகையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலீடு பெரிதில்லை… திறமைதான் முக்கியம்!
இந்தத் தொழிலில் அதிக முதலீடு தேவையில்லை என்பதுதான் இவர்களின் முக்கியமான கருத்து. கண்ணாடி ஆர்ட்டைப் பொறுத்தவரை முதலீட்டைவிட, அதைச் செய்யத் தெரிந்த திறமைதான் முக்கியம் என்கிறார்கள். “இந்த கிளாஸ் பிரேக் ஆர்ட்டுக்கு பெருசா முதலீடு தேவையில்லை. இது முழுக்க நம்ம கைத்திறனைப் பொறுத்ததுதான்.” ஒரு ஓவியத்துக்கு கிடைக்கும் விலை, அதில் செலுத்தப்படும் நேரம் மற்றும் நம் கைத்திறன் பொருத்துதான் இருக்கும்.