Gatta Kusthi 2: “விஷ்ணுவுடன் 3 படங்கள் பண்ணதுக்கு எனக்கு 3 அவார்டுகள் கொடுக்கலாம்" – செல்லா அய்யாவு

Spread the love

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 3 அன்று வெளியானது.

2022, டிசம்பர் 2 அன்று வெளியான ‘கட்டா குஸ்தி’ முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால்

இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு, “எனக்கு ‘வேல்ஸ்’ கல்வி நிறுவனத்தில் சீட் கிடைக்கவில்லை. இன்று அதே வேல்ஸ் நிறுவன அதிபர் ஐசரி கணேஷ் சார் தயாரிப்பில் படம் இயக்கி, அவர் பக்கத்திலேயே அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதலில் நான் மனமார்ந்த நன்றியை ரசிகர்களுக்குத்தான் சொல்ல வேண்டும். உங்களது பேராதரவு இல்லை என்றால் ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் சாத்தியமாகி இருக்காது.

விஷ்ணு சார் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்த நொடியில் இருந்து, அவரது அசாத்திய உழைப்பை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இப்படம் பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்று 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றியே சிந்திப்பவர். அவருக்கு இந்த வெற்றி ஒரு தகுதியான பரிசு.

நான் கேட்காமலேயே எனக்கு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட வாய்ப்பை விஷ்ணு சார் கொடுத்தார். அடுத்த கதை எழுதுங்கள் என்று ஊக்கமளித்தார். அப்படி உருவானதுதான் ‘கட்டா குஸ்தி 1’. விஷ்ணு சார் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கே நிறைய கணக்கு போட்டு, அனலைஸ் செய்வார். அதனால்தான் அவரை ‘அனலைசிங் ஸ்டார்’, ‘கால்குலேட்டிங் ஸ்டார்’, ‘எக்ஸ்பெரிமெண்டல் ஸ்டார்’ என்று நான் அழைப்பேன்.

அப்படிப்பட்டவர் 17 வருட சினிமாவில் 22 படங்கள் மட்டுமே செய்துள்ளார். ஆனால், ஒரு தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் என்னை முழுமையாக நம்பி அடுத்தடுத்து மூன்று பட வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார். விஷ்ணு சாருடன் மூன்று படங்கள் செய்ததற்காக எனக்கே மூன்று அவார்டுகள் கொடுக்கலாம்.

நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால்

ஒரே நேரத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை எனப் பல நிறுவனங்களையும், கூடவே 10 படங்களையும் தயாரிக்கும் ஐசரி கணேஷ் சார் எப்போதும் பரபரப்பாகவும், புன்னகையுடனும் இருப்பது எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். நடிகை ஐஸ்வர்யாவுக்கு ஆரம்பத்தில் கதை மீது பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும், என்னை நம்பி வந்து சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம் சாரா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலே தனி வெளிச்சம் வந்துவிடும். மணிவண்ணன் சாருக்குப் பிறகு நகைச்சுவையும் வில்லத்தனமும் கலந்த கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்யக்கூடிய கருணாஸ் அண்ணன், படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளார்.

முனீஷ்காந்த் அண்ணன், காளி அண்ணன் பெரிய ரோல் பண்ணிக் கொண்டிருந்தாலும், நமக்காக வந்து நடித்துக் கொடுத்தார். குறிப்பாக இசையமைப்பாளர் ஷான் தான், `இது 100 கோடி அடிக்கும் பெரிய படம், ஏன் கவலைப்படுகிறீர்கள்?’ என்று ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குப் பெரிய நம்பிக்கையாக இருந்தார் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *