விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது.
2022, டிசம்பர் 2 அன்று வெளியான ‘கட்டா குஸ்தி’ முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “இது எனக்கு மிகவும் அழகான ஒரு தருணம். ஏன்னென்றால், என்னுடைய ஒட்டுமொத்த குழுவும் இங்கு இருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது, நம்முடைய உழைப்பில் ஆகச்சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கனவோடுதான் செல்வோம். ஏனென்றால், ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படத்தைப்பார்க்கும்போது, அதில் ஏதோ ஒரு குறை இருப்பதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது.
இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு வெற்றி என்பது எப்போதாவது ஒருமுறைதான் நமக்குக் கிடைக்கும். இப்போது நாம் அடைந்திருக்கும் இந்த வெற்றியை எல்லாரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள், ஊடக நண்பர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்காக நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு இணைந்து பணியாற்றிய இந்த அற்புதமான குழுவிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதில் இந்த ஒரு நபர் மட்டும்தான் முக்கியமானவர் என்று யாரையும் பிரித்துச் சொல்லிவிட முடியாது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களுடைய 100% உழைப்பையும், பங்களிப்பையும் கொடுத்துள்ளார்கள். என்னுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள் , சக நடிகர்கள், படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு சார் என அனைவருக்கும் என் நன்றிகள்.

அடுத்ததாக, என்னுடைய தங்கமான, செல்லமான இயக்குநரான ‘செல்லா’ சாருக்கு என்னுடைய பிரத்யேக நன்றிகள். இந்த அழகான வெற்றியில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இறுதியாக, சாரா-விற்கு என்னுடைய ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். ஏனென்றால், என் வாழ்க்கையில் நான் நினைத்துக் கூடப் பார்க்காத அளவிற்கு, இவ்வளவு அழகான உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியும் என்பதை அவரின் மூலம் உணர்ந்தேன். மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ரசிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.