‘GOAT’ சகாப்தத்தின் முடிவுரை.. சுயநலத்தின் உச்சத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. மோசமான ஆட்டம்! | Is this the fall of the GOAT? Cristiano Ronaldo’s ‘selfish’ play and historic drought costs Portugal in World Cup opener

Spread the love

Sports

oi-Shyamsundar I

ஹூஸ்டன்: ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) என்று உலகப் புகழப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்விதான் தற்போது உலகம் முழுக்க எழுந்துள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அவர் ஆடும் விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

குரூப் கே (Group K) தொடக்க ஆட்டத்தில், நட்சத்திர வீரர்கள் நிறைந்த போர்ச்சுகல் அணி, பலவீனமான காங்கோ குடியரசு (DR Congo) அணியுடன் 1-1 என சமன் செய்திருப்பது உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, 41 வயதான கேப்டன் ரொனால்டோவின் சுயநலமான ஆட்டமும், மோசமான ஃபார்முமே போர்ச்சுகலின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

World Cup Cristiano Ronaldo

ஒரு காலத்தில் எதிரணிகளின் தற்காப்பு அரண்களை ஒற்றை ஆளாகத் தகர்த்தெறிந்த ரொனால்டோ, இன்று போர்ச்சுகல் அணியின் மிகப்பெரிய பாரமாக மாறி வருகிறாரா என்ற கேள்வியே இந்த ஆட்டத்தின் முடிவில் எஞ்சியுள்ளது.

காங்கோவுக்கு எதிரான ஆட்டமும், அம்பலமான பலவீனமும்

இந்த உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ், பிரேசில் போன்ற அணிகளுக்கு இணையாக கோப்பையை வெல்லும் தகுதி படைத்த வலுவான அணியாக போர்ச்சுகல் கருதப்படுகிறது. புரூனோ பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா, ஜோவாவ் நெவ்ஸ், ரஃபேல் லியோ என உலகத்தரம் வாய்ந்த இளம் படையே போர்ச்சுகல் அணியில் அணிவகுத்து நிற்கிறது. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே இளம் வீரர் ஜோவாவ் நெவ்ஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்து போர்ச்சுகலை முன்னிலைப்படுத்தினார். ஆனால், அதன்பின்னர் ஆட்டம் முழுக்க ரொனால்டோவை நோக்கியே நகர்த்தப்பட்டது.

ஆட்டத்தின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் காங்கோ அணியின் யோவான் விசா ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இரண்டாவது பாதியில் போர்ச்சுகல் அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராடியிருக்க வேண்டும். ஆனால், களத்தில் இருந்த ரொனால்டோவின் உடல்மொழியும், ஆட்ட முறையும் போர்ச்சுகலின் ஒட்டுமொத்த உத்திகளையும் பாழாக்கியது. பாக்ஸிற்குள் கிடைத்த இரண்டு மிக எளிதான வாய்ப்புகளை (Clear chances) ரொனால்டோ கோலாக மாற்றத் தவறினார். அவரது ஷாட்டுகள் இலக்கை நோக்கி அமையாமல் (0 shots on target) வெளியே சென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுயநல ஆட்டமும் தியரி ஹென்றியின் சாட்டையடி விமர்சனமும்

ரொனால்டோவின் ஆட்டம் குறித்து கால்பந்து உலகின் ஜாம்பவான் தியரி ஹென்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் (Fox Sports) தொலைக்காட்சியில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மைதானத்தில் ரொனால்டோவின் ‘சுயநலம்’ மற்றும் தவறான பொசிஷனிங் (Positioning) எப்படி போர்ச்சுகலின் கோல் வாய்ப்புகளைத் தடுத்தது என்பதை அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.

ஆட்டத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில், புரூனோ பெர்னாண்டஸ் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்றபோது, ரொனால்டோ காங்கோவின் டிஃபெண்டர்களை திசைதிருப்பி பாக்ஸிற்குள் மற்ற வீரர்களுக்கு இடம் (Space) ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தானே கோல் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவர் பந்து வரும் திசையை நோக்கியே ஓடிவந்து இடத்தை நெருக்கடி ஆக்கினார். இதனால் காங்கோ வீரர்கள் மிக எளிதாக போர்ச்சுகலின் அட்டாக்கை முறியடித்தனர்.

“ரொனால்டோ அணிக்கு உதவ நினைக்கவில்லை, தனக்காக மட்டுமே விளையாடுகிறார். அவரது இந்த அணுகுமுறை போர்ச்சுகல் அணியின் இளம் வீரர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது,” என்று தியரி ஹென்றி சாடியுள்ளார்.

வரலாற்றில் இல்லாத மோசமான புள்ளிவிவரங்கள்

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவரை “சுயநலவாதி” என்றும், “கோட்டின் வீழ்ச்சி” (Fall of the GOAT) என்றும் விமர்சிப்பது வெறும் உணர்ச்சிவசப்பட்டப் பேச்சு அல்ல என்பதை புள்ளிவிவரங்கள் நிருபித்துக் காட்டுகின்றன.

25 டச்சுகள் மட்டுமே: காங்கோவுக்கு எதிரான 90 நிமிட ஆட்டத்தில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக வெறும் 25 முறை மட்டுமே பந்தைத் தொட்டுள்ளார். அவரது உலகக் கோப்பை வரலாற்றிலேயே, அவர் தொடக்க வீரராகக் களம் இறங்கி மிகக் குறைந்த டச்சுகளைப் பதிவு செய்தது இது இரண்டாவது முறையாகும். மிடில்ஃபீல்டில் இருந்து வரும் பந்துகளை வாங்கி ஃபார்வர்டு கொண்டு செல்வதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்தார்.

0 போட்டிகளாகத் தொடரும் வறட்சி: யூரோ 2024 தொடரில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றிய ரொனால்டோ, தற்போது உலகக் கோப்பையிலும் சேர்த்து சர்வதேச அளவிலான பெரிய தொடர்களில் (Major Tournaments) தொடர்ந்து 10 போட்டிகளாக ஒரு கோல் கூட அடிக்காமல் வறட்சியைச் சந்தித்து வருகிறார்.

சவுதி லீக் ஃபார்ம் உலகக் கோப்பைக்கு உதவாது!

அல் நஸர் (Al Nassr) அணிக்காக சவுதி புரோ லீக்கில் கோல்களைக் குவித்து, சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்றதால் ரொனால்டோ இன்னும் அதே ஃபார்மில் இருக்கிறார் என்று அவரது தீவிர ஆதரவாளர்கள் வாதிடலாம். ஆனால், சவுதி லீக்கின் தரமும், உலகக் கோப்பையின் தீவிரமும் முற்றிலும் வேறானது என்பதை இந்த காங்கோ ஆட்டம் உணர்த்தியுள்ளது. 41 வயதில் உலகக் கோப்பை போன்ற அதிவேக ஆட்டத் தொடர்களில், ஆப்பிரிக்க அணியின் இளம் வீரர்களின் வேகத்திற்கு இணையாக ரொனால்டோவால் ஓட முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ரொனால்டோவின் பிரம்மாண்டமான சாதனைகளையும், கால்பந்து உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால், அணியின் வெற்றியை விடத் தனது தனிப்பட்ட சாதனைகளுக்கும், ஆறாவது உலகக் கோப்பையில் கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுப் பதிவிற்கும் மட்டுமே அவர் முக்கியத்துவம் தருவது போல அவரது ஆட்டம் அமைந்துள்ளது.

பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். ரொனால்டோ போன்ற ஒரு உலகப் புகழ்பெற்ற கேப்டனை அணியில் இருந்து நீக்குவது சாதாரண விஷயமல்ல. ஆனால், ஜான்ஸாலோ ராமோஸ், ரஃபேல் லியோ போன்ற துடிப்பான இளம் வீரர்கள் பெஞ்ச்சில் அமர்ந்திருக்க, ஃபார்மில் இல்லாத ரொனால்டோவிற்கு 90 நிமிடங்களும் வாய்ப்பளிப்பது போர்ச்சுகல் அணியின் உலகக் கோப்பை கனவையே சிதைத்துவிடும்.

ஜூன் 23 அன்று உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஜூன் 27 அன்று கொலம்பியாவுக்கு எதிராகவும் போர்ச்சுகல் விளையாடவுள்ளது. இந்த அடுத்தடுத்த போட்டிகளிலாவது ரொனால்டோ தனது சுயநல ஆட்டத்தைக் கைவிட்டு, அணியின் வெற்றிக்காக விளையாடுவாரா அல்லது போர்ச்சுகலின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்து “வீழ்ந்த கோட்” ஆக விடைபெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *