மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நிறுவனத்தின் கேஸ் நிரப்பும் மையம் இருக்கிறது. தொடர்ந்து அங்கு பெய்த மிகக் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சிலிண்டர்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆலை வளாகத்தில் இருந்த சிலிண்டர்களை முழுமையாக மழை அடித்துச் சென்று விட்டது. நிரப்பப்பட்ட மற்றும் காலியானவை உட்பட சுமார் 3000 எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர்கள் பாதாள்கங்கா நதியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, ஆற்றில் மிதந்து வரும் அல்லது கரைகளில் ஒதுங்கும் சிலிண்டர்களைத் தொடுவதோ அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜவாலே அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த சிலிண்டர்கள் காலியாக இருக்கின்றனவா அல்லது அவற்றில் அபாயகரமான எரிவாயு நிரம்பியுள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிவது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் சிலிண்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வேகமாக ஓடும் சேறு கலந்த நீரில் ஆயிரக்கணக்கான எல்பிஜி சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பன்வெல் ஆலையின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
கடற்கரை பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.!