கொன்றவருக்கு பணம் மட்டுமல்ல… ஆயுதத்துக்கும் பரிசு!
இதோடு இந்த அறிவிப்பு முடிந்துவிடவில்லை.
அமெரிக்க வீரரை கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் உரிமையாளரிடமிருந்து இரட்டிப்பு விலைக்கு வாங்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் ஹடாமி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், அந்த ஆயுதம் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அவர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“அமெரிக்காவுக்கு இனி இங்கு இடமில்லை!”
அமெரிக்காவின் ராணுவ வலிமை குறித்த அந்நாட்டின் கூற்றுகள், ஈரானுடனான போரில் வெளிப்பட்டுவிட்டதாகவும் ஹடாமி விமர்சித்துள்ளார்.
மேலும், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய இனி அனுமதிக்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனரா?
இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில், போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையும் கவனம் பெறுகிறது.
ஜூலை 22-ம் தேதி அமெரிக்க தரப்பின் கணக்கில், ஈரான் போருடன் தொடர்புடைய சம்பவங்களில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு, பென்டகனின் உயிரிழப்பு தரவுத்தளத்தில் எண்ணிக்கை 14 ஆகக் காட்டப்பட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பின்னர் வெளியான தகவல்கள், போரின் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை தனித்தனியாக வகைப்படுத்தியதன் காரணமாகவே இந்த எண்ணிக்கை மாறியதாகக் கூறின. குறிப்பாக, ஜூலை 7-க்குப் பிறகு நடைபெற்ற நடவடிக்கைகளுக்கான உயிரிழப்புகள் “வெளிநாட்டு நடவடிக்கைகள்” என்ற தனிப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டன.
அதனால், 18-ல் இருந்து 14 ஆக அமெரிக்க வீரர்களின் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. உயிரிழப்புகளை பென்டகன் வகைப்படுத்திய விதத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த எண்ணிக்கை வேறுபாட்டுக்குக் காரணம்.
மேலும், இந்த மோதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் அனைவரும் ஈரான் மண்ணிலேயே உயிரிழந்தவர்கள் அல்ல. ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் நடந்த சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.