Iran seizes US underwater drone in the Strait of Hormuz; West Asia on edge | அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றிய ஈரான்! – பதட்டத்தில் ஹார்மூஸ் ஜலசந்தி

Spread the love

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடத்திய தாக்குதல் ஒரு முறை முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஹார்மூஸ் ஜலசந்திக்காக அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக டேங்கர் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஈரானுக்கு தொடர்புடைய 5 டேங்கர் கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடற்படை மூழ்கடித்தது. இதனை அமெரிக்காவும் உறுதிபடுத்தி இருக்கிறது.

ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவ தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமானத் தளத்தைத் குறிவைக்கும் விதமாக ஈரான் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து ஜோர்டானிய இராணுவம் அதன் வான் பாதுகாப்பு வலையமைப்பு மூலம் உள்வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது.

பிடிபட்ட நீர்மூழ்கி ட்ரோன்

ஈரானிய புரட்சிகர காவல் படை ஹோர்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலைக் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

அது ஒரு நீர்மூழ்கி ட்ரோன் என்று கூறப்படுகிறது. அது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். பிடிபட்ட 19-அடி நீர்மூழ்கிக் கப்பல் கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்பரப்பு மேப்பிங், உளவுத்துறை சேகரிப்பு மற்றும் கேபிள்கள் மற்றும் குழாய்கள் போன்ற நீரில் மூழ்கிய முக்கியமான உள்கட்டமைப்பை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட Dive-LD எனப்படும் நீர்மூழ்கி ட்ரோன் தளத்திற்குத் திரும்பாமல் 10 நாட்கள் வரை கடலுக்குள்செயல்பட முடியும். இது கடலில் 6,000 மீட்டர் (19,700 அடி) ஆழத்தில் பயணம் செய்யக்கூடியது. டைவ்-எல்டி ட்ரோன் ஒவ்வொன்றும் $2.5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.

இது குறித்து ஈரானிய புரட்சிகர காவல் கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், “ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றை நாங்கள் பிடித்திருக்கிறோம். இந்த நீர்மூழ்கிக் கப்பல் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த நீர்மூழ்கி ட்ரோனில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தவிர ஹார்முஸ் ஜலசந்தியில் MQ-9 ரீப்பர் ட்ரோனை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *