தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டபோது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். தொடர்ந்து, “‘ஜெய் சமக்யாந்திரா கட்சி” எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். மீண்டும் 2023-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜாம்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தற்போது அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரண்குமார் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்த காலத்தில்தான், அப்போதைய தலைநகரான ஐதராபாத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ்ஸை அமைப்பு தீவிரமாக வளர்ச்சியடைந்தது. அதற்கு கிரண்குமார் ரெட்டி பெரியளவில் உதவினார் என அப்போது சில கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்தன. இன்னும் சொல்லப்போனால், அதுவரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அசாதுதீன் ஓவைசி, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துதான் கூட்டணியிலிருந்தே வெளியேறினார்.
அதுமட்டுமல்ல, கிரண்குமார் ரெட்டி தனிக்கட்சி நடத்தியபோது, 2014 தேர்தலில் அவருக்குச் செருப்புச் சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது, ”ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது. அதுபோல, இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்” என அவர் பேசியதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியது. அடிப்படையில் காங்கிரஸ்காரராக இருந்தாலும், இந்துத்துவ அரசியலின் ஆதரவாளராகவே இருந்துவந்தார் கிரண்குமார் ரெட்டி.
பின்னர் அவர் பா.ஜ.கவிலேயே இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, தற்போது அவர் தமிழ்நாட்டின் கவர்னராக நியமிக்கும் தகவல்கள் குறித்து விபரமறிந்தவர்கள் பேசும்போது, ”தமிழ்நாட்டின் முதல்வர் விஜயின் நண்பரும் அதிகார மையமாகத் திகழும் விஷ்ணு ரெட்டிக்கு ஒருவகையில் கிரண்குமார் ரெட்டி உறவினர். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பா.ஜ.கவின் வளர்ச்சிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைக் கொண்டு வருவதற்கும் கிரண்குமார் ரெட்டி உதவிபுரிவார். த.வெ.கவுடன் ஒரு இணக்கப்போக்கை கடைபிடிப்பார் என்பதால் அவர் பெயர் பரிசீலினையில் இருக்கிறது” என்கிறார்கள்.
ஆனால், இதுவரை ஆளுநர் நியமனத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.