விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார்.

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அவர், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாட முடியவில்லை எனப் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “மாணவர்கள் போராட்டம் போய்க்கொண்டிருக்கும்போது படம் வெளியாகியிருப்பதை என்னால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை.
என் மனது முழுவதும் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுடன்தான் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை என்னால் முழுமையாகக் கொண்டாடவோ, என்ஜாய் பண்ணவோ முடியவில்லை.
விஜய் சாருக்கு ‘முதலமைச்சராக இது முதல் படமா?’ என எனக்கு அப்படிப் பார்க்கத் தெரியவில்லை. அதில் நடிகர் விஜய்தான் நடித்திருக்கிறார். அதனால் இதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. திரைத்துறை மூலம் ஏதேனும் நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.

என்னைப் பார்த்து நிறைய பெண்கள் தங்களோடு ஒப்பீடு செய்துகொள்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தரும் வகையில், அவர்கள் தங்களையே அதில் பிரதிபலித்துப் பார்க்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
அதேபோலப் பெண்களுக்கு முக்கியமான கருத்துகளைக் கடத்தும் கதைகளைத் தேடித் தேடி நடிக்க விரும்புகிறேன்.
உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆழமான கருத்துகள் கொண்ட கதைகளிலும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தைப் பேசும் திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை” எனக் கூறியிருக்கிறார்.