Janaki: “என் மெட்டுக்கு மெருகேற்றியவர்; பாட்டுக்கு அமுதூட்டியவர்" – டி.ராஜேந்தர் இரங்கல்

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி.

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடப்பட்ட இவர், நேற்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.

இவரின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, நான்கு முறை தேசிய விருதுகளையும், எண்ணற்ற மாநில அரசுகளின் விருதுகளையும் வாரிக் குவித்த, தென்றல் இசைப் பாடகி, ‘தேன்குரல் தேவகி’ எஸ். ஜானகி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சை வாட்டுகிறது.

ஜானகி மறைவு
ஜானகி மறைவு

‘நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுதே’ என்று நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம், தந்துவிட்டாரே நீங்காத சோகம் வசந்தம். பாடி வர, வைகை ஓடி வர, இளமை கூடி வர, இனிமை தேடி வர என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர் பாட்டுக்கு அமுதூட்டியவர்.

சந்தன காற்றாம் சங்கதி ஊற்றாம் சங்கீத குயிலாம் என்னுடைய ‘சம்சாரம் சங்கீதம்’ படத்திலே என் மகன் சிலம்பரசனுக்காக ‘ஐ எம் ஏ லிட்டில் ஸ்டார் ஆவே நான் சூப்பர் ஸ்டார்’ என்று பாட்டு படித்தாயே… முத்திரை பதித்தாயே… இன்று நீங்காத நித்திரைக்குச் சென்றுவிட்டாயே என்று என்னுடைய நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டுவிட்டது.

அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும், இந்திய கலை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும், நேயர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *