India
oi-Vishnupriya R
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் சீலிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் இருந்ததை அடுத்து அங்கிருந்த ஒரு பெண் அதை தெரியாமல் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹாபூரில் அர்ஜுன் நகர் பகுதி உள்ளது. இங்கு பெண் ஒருவர் நகைக் கடையை நடத்தி வருகிறார். அவருக்கு தண்ணீர் தாகமாக இருந்ததால் அங்கிருந்த ஊழியரிடம் தண்ணீர் கேட்டாராம்.

அப்போது அவர் பக்கத்தில் இருந்த மிட்டாய் கடை ஒன்றில் பிரிட்ஜில் இருந்த பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். ஊழியம் அந்த பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட பாட்டிலை பெற்று பெண்ணிடம் கொடுத்தார்.
அந்த பெண் அந்த பாட்டில் தண்ணீரை ஒரு முழுங்கு குடித்தவுடன் தொண்டை எரிச்சலை கொடுக்க ஆரம்பித்து, திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பாட்டிலை ஆய்வு செய்த போது அது ஆசிட் என தெரியவந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊழியரை பிடித்து விசாரித்த போது அவர் பக்கத்து கடையில் இருந்து தண்ணீரை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
அந்த கடையில் ஆய்வு செய்த போது அங்கு ஏராளமான சீலிடப்பட்ட வாட்டர் கேன்களை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறார்கள். சீலிடப்பட்ட பாட்டிலில் ஆசிட் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
