கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.
(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு வலையமைப்புகள் அல்லது தரவுகளை சட்டவிரோதமாக சேதப்படுத்துதல் அல்லது திருடுதல் எனலாம்).
அணுமின் நிலைய சைபர் தாக்குதல் செய்தி வெளியானதும் பொதுமக்கள் பலரது மனதில் முதன்முதலில் எழுந்த பெரும் அச்சம் என்பது அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதோ என்பதும் அதனால் பெரும் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டு விடுமோ என்பதும்தான்.
ஆனால் அணுமின் நிலையத்தின் அணு உலைக் கட்டுப்பாடு அமைப்புகள் ஹேக் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது இந்திய அணுசக்திக் கழகம்.

அதாவது அணு உலைகளின் கட்டுப்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. மின் உற்பத்தி வழக்கம் போலத் தொடர்கிறது. ஏனென்றால் ஹாக் செய்யப்பட்ட தகவல்கள் அணு உலை இயக்கம் அல்லது பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பானவையல்ல.
அவை Balance of Plant எனப்படும் துணை உள்கட்டமைப்புகள் தொடர்பானவை என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே).
அணு மின் நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு பல திகிலூட்டும் காரணங்கள் உண்டு.