பெங்களூருவில், போக்குவரத்து சிக்னலில் நடந்த ஒரு சாதாரண உரையாடல், மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. தனது லம்போர்கினி காரை ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம், காரின் சாவியைக் கொடுத்துவிட்டு, அந்த ஆட்டோவை தொழிலதிபர் ஒருவர் ஓட்டிச் சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
ராகேஷ் கே.என்.வி என்ற அந்த தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி, அவரது பெருந்தன்மைக்கும், நம்பிக்கைக்கும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
லம்போர்கினி காரில் ராகேஷ் பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓர் ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு அருகில் வந்துள்ளார்.
ராகேஷை அவரது ஆன்லைன் வீடியோக்கள் மூலம் அடையாளம் கண்டுகொண்ட அந்த ஓட்டுநர், அவரின் நீண்டகால ரசிகர் என்றும், அவரது காரை மிகவும் ரசிப்பதாகவும் உற்சாகத்துடன் கூறியுள்ளார். மேலும், அந்த சொகுசு காரை ஒருமுறையாவது ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.