இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவரான மாதவனுக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி நடந்த இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதை மாதவனுக்கு வழங்கி கௌரவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது மாதவனுடன் அவரது மனைவி சரிதா மற்றும் மகன் வேதாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
விருது வழங்கும் விழாவில் மாதவனின் பத்மஸ்ரீ அங்கீகாரம் முதன்மையாகப் பேசப்பட்டாலும், அவர் அணிந்திருந்த நேர்த்தியான ஆடையும், கையில் கட்டியிருந்த காஸ்ட்லி கடிகாரமும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழாவிற்கு மாதவன் ஃபிரேம் இல்லாத கண்ணாடி மற்றும் தங்கச் சங்கிலியுடன், பழுப்பு நிற லெதர் ஸ்ட்ராப் கொண்ட கடிகாரத்தையும் அவர் அணிந்திருந்தார்.
அவர் அணிந்திருந்த கடிகாரம் சாதாரணமானது அல்ல. அது இந்திய நிறுவனமான டைட்டன் தயாரித்த மிக அரிதான `Titan Nebula Jalsa Flying Tourbillon’ ஆகும். 18 கேரட் Rose Gold உறை கொண்ட இந்த கடிகாரம், டைட்டனின் ஆடம்பர நெபுலா கலெக்ஷனின் கீழ் உருவாக்கப்பட்டது. ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ‘ஹவா மஹால்’ கோட்டையினால் ஈர்க்கப்பட்டு, ராஜஸ்தானின் பாரம்பரிய நுண்கலை ஓவிய பாணியில் இதன் முகப்பு (Dial) கைகளால் வரையப்பட்டுள்ளது. உலகிலேயே வெறும் 10 கடிகாரங்கள் மட்டுமே இந்த மாடலில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த சொகுசு கடிகாரத்தின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.