லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.ஜி.பி அருணுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதனால் முன்னாள் அமைச்சர்களை ஒரு பக்கம் குறிவைக்கும் அவர், மறுபக்கம் நேர்மையற்ற அதிகாரிகளையும் சல்லடை போட உத்தரவிட்டிருக்கிறாராம். அதன்படி பத்திரப் பதிவுத்துறை, ஆர்.டி.ஓ அலுவலகங்கள் என பல இடங்களில் ரெய்டுகள் பறந்தன. ஆனால், பல சோதனைகளிலும் அதிகாரிகள் வெறும் கையோடுதான் திரும்பியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம், ரெய்டுக்கு கிளம்பும் முன்பே, “சார்… கொஞ்சம் ஜாக்கிரதை!” என்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தகவல் கசியவிடப்படுகிறதாம். இதனால் பெரிய மீன்கள் தப்பி ஓட, சிறிய மீன்கள் மட்டும் வலையில் சிக்குகிற சூழல் உருவாகியிருக்கிறது. “மற்ற துறைகளை சுத்தம் செய்வதற்கு முன், நம்ம துறையிலேயே இருக்கும் கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்கணும்!” என்று புலம்புகிறார்களாம் லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர்கள்.