மகாராஷ்டிராவில் முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அமைச்சராவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புனேயில் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட புத்தகத்தை பட்னாவிசின் சித்தப்பா பாலாசாஹேப் வெளியிட்டார். இதில் பேசிய பாலாசாஹேப், “இவ்வளவு இளம் வயதில், குறுகிய காலத்தில், இவ்வளவு சுமூகமாக சாதித்தவர்கள் வரலாற்றில் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று நான் நம்புகிறேன்.
ஜனசங்கத்தின் ஆரம்ப நாட்களில் நிதியோ அல்லது கட்சித் தொண்டர்களோ இல்லாத போதிலும், நானும் எனது சகோதரர்(பட்னாவிஸ் தந்தை) கங்காதர்ராவும் கிராமப்புறங்களில் பரவலாக பிரச்சாரம் செய்வோம். ஜனசங்கத்தின் தீவிரத் தலைவரான கங்காதரராவ், தேர்தல் பிரச்சாரத்தின் போது கல் வீச்சு மற்றும் கடுமையான வார்த்தைகளால் திட்டுதல் உட்பட கட்சித் தொண்டர்கள் அடிக்கடி விரோதத்தை எதிர்கொள்ளும் கிராமங்களில் பணியாற்றினார்.
கங்காதரராவ் தனது பணியில் தீவிரமானவர், ஆனால் இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர். ஜனசங்கம் இல்லாத பகுதிகளுக்கும் கூட அவர் சென்றார்.

சில கிராமங்களில் ஜனசங்கத்தின் பெயரைக் கூறினால் எங்களைக் கல்லால் அடித்துத் திட்டுவார்கள். நாளடைவில் பா.ஜ.கவில் பஞ்சாயத்து தலைவர்கள் சேர ஆரம்பித்தார். தேவேந்திர பட்னாவிசிடம் அவரது தந்தையின் குணங்கள் அப்படியே இருக்கிறது. ஒருமுறை தேவேந்திர பட்னாவிஸ் ஏதாவது செய்ய முடிவு செய்தால், அதை அடையும் வரை அவர் நிறுத்தவே மாட்டார். அவரது ஆழமான படிப்பும் அர்ப்பணிப்பும் அசாதாரணமானது” என்று பாலாசாஹேப் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸின் ஆரம்ப ஆண்டுகளை நினைவுகூர்ந்த பாலாசாஹேப், அவர் சட்டக் கல்லூரியில் முதலிடம் பெற்றவர் என்றும், அவர் அரசியலில் நுழைவார் என்று குடும்பத்தினர் நம்புவதற்கு வழிவகுத்த விதிவிலக்கான சொற்பொழிவு திறன்களைக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.
இவ்விழாவில் மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டு பேசுகையில்,”‘தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு கடின உழைப்பாளி. அவர் மந்த்ராலயாவில் மக்களைச் சந்திக்க மறுப்பதில்லை. மேலும் அவர் தங்கள் குறைகளைக் கூறுபவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு உத்தரவாதத்தையும் தனிப்பட்ட முறையில் பின்பற்றுகிறார். அவர் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத பணிகளை செய்துள்ளார்” என்று பாட்டீல் கூறினார்.