இப்போதும்கூட பால் விவசாயிகள் அனைவருக்கும் 44 ரூபாய் கிடைத்துவிடாது. ஏனெனில், அரசு அறிவித்திருக்கிற இந்த விலை உயர்வு என்பது, 4.3% கொழுப்பு சத்து, 8.2% இதர சத்துகள் அடங்கிய பாலுக்கு மட்டும்தான்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 90% பாலில், இந்த விகிதாச்சாரத்தில் பால் கிடைக்காது. எனவே, பாலின் தரத்தைப் பொறுத்து 2 அல்லது 3 ரூபாய் குறைத்துதான் தருவார்கள். அந்தப் பணத்தையும் வாரம் தோறும் பட்டுவாடா செய்யமாட்டார்கள். மாதக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்.
இதுவே தனியார் பால் நிறுவனங்கள், ஆவினை விடவும் லிட்டருக்கு 10 ரூபாய் அதிகம் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். பாலின் தரத்துக்கு ஏற்ற விலை நிர்ணயம் என்பதும் அவர்களிடம் கிடையாது. அடுத்து, வாரம்தோறும் பணப் பட்டுவாடா செய்துவிடுகின்றனர். எனவே, ஆவினுக்கு வரவேண்டிய பால் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது. இதனால்தான் பொதுமக்களுக்குத் தேவையான அளவில் பால் வழங்க முடியாமல் ஆவின் நிறுவனம் திண்டாடி வருகிறது” என்றார் ஆதங்கத்துடன்.
இவ்விவகாரத்தில் ஆவினின் நடைமுறை சிக்கல்கள் குறித்துப் பேசுகிற ‘தென்னிந்திய பால் போக்குவரத்து சங்க’ தலைவர் வைத்தியநாதன், “மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பால் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் விலை 67 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூடுகிறதே தவிர… பால் விற்பனை விலையோ, கொள்முதல் விலையோ யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்த கதையாக மட்டுமே உயர்கிறது.
ஏற்கெனவே ஆவின் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் 6 ரூபாயையும் அரசே நேரடியாக பால் சொஸைட்டிக்கு வழங்க வேண்டும். அதையும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒருமுறையாவது பட்டுவாடா செய்யவேண்டும்.” என்கிறார்.
இவ்விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக ஆவின் நிர்வாக இயக்குநர் அஜித் யாதவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியைத் தொடர்புகொண்டோம். இருவருமே நமது அழைப்பை ஏற்கவில்லை! இதைத்தொடர்ந்து அமைச்சரின் உதவியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதையே பதிலாக போட்டுக்கொள்ளுங்கள்” எனக்கூறி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.