அவர்களிடம் நடத்திய விசாரணையில், குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான் டெய்லரான மானிக் உத்தினுக்கு ஹயத்துன்நிஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகியதில் ஹயத்துன்நிஷா கர்ப்பமடைந்திருக்கிறார். தன்னுடைய கர்ப்பத்துக்கு மானிக் உத்தின்தான் காரணம் எனக் கூறிய ஹயத்துன்நிஷா, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் மானிக் உத்தினின் காதலி பசுமதி மாஜிக்குத் தெரியவர, பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஒருகட்டத்தில், தங்களின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் ஹயத்துன்நிஷாவை கொலை செய்துவிட்டால் பிரச்னை முடிந்துவிடும் என மானிக் உத்தினும் பசுமதி மாஜியும் முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, ஹயத்துன்நிஷாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதுபோல மானிக் உத்தினும், அவருடைய காதலி பசுமதி மாஜியும் நடித்திருக்கிறார்கள். இதை நம்பிய ஹயத்துன்நிஷா, மானிக் உத்தின், பசுமதி மாஜி ஆகியோரை கூடுவாஞ்சேரி வீட்டில் தங்க அனுமதியளித்திருக்கிறார்.
சம்பவத்தன்று ஹயத்துன்நிஷாவுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்த இருவரும், சடலத்தை எப்படி அகற்றுவது என யூடியூப் வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள். அப்போது சடலத்தை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்தால் எளிதில் அப்புறப்படுத் விடலாம் என காதல் ஜோடி முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஹயத்துன்நிஷாவின் சடலத்தை குளியலைறக்கு எடுத்துச் சென்ற மானிக் உத்தின், மட்டன் வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி தலை, கை, கால்கள், இடுப்பு பகுதி என துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர் அவைகளை சூட்கேஸில் வைத்து அடைத்திருக்கிறார். ஆனாலும் சில உடல் பாகங்களை சூட்கேஸிக்குள் வைக்க முடியவில்லை.