சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மிசா கைது குறித்து, முதல்வர் விஜய்-யின் செய்கை பரவலான விமர்சனம் பெற்ற நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த செய்கை குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி அமைத்திருக்கிறோம். இது ஒரு சக்திவாய்ந்த கூட்டணி என்பதால், இதில் வெற்றி பெறுவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.வெ.க. தரப்பில் யாருக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பது என்பது குறித்த முழு அதிகாரமும் அவர்களுக்கே உரியது. அதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களை ஆதரிப்பதா, வெற்றி பெற வைப்பதா என்பதை அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்த மக்களே முடிவு செய்வார்கள்.

இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஓர் அங்கமாக இருக்கிறது. எனவே, கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது கூட்டணிக்கான முக்கியத் தேவையாகும். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி த.வெ.க வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பாடுபடும். நாங்கள் இந்தக் கூட்டணியில் இருப்பதோடு, ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறோம். இதனால் த.வெ.க.விற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அவ்வப்போது அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறோம். அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும் இணைந்துள்ளதால் அதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.