International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: ”நம் நாட்டின் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு புதிதாக மருத்துவம் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் அட்மிஷன் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் அரசு அனைத்து கல்லூரிகளுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு நடுவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இருநாடுகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. எல்லைகளில் அடிக்கடி தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் அரசு திடீரென்று தங்கள் நாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு அதிரடியாக உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கன் மாணவர்களை வெளியேற்ற உத்தரவு
இதுதொடர்பாக பாகிஸ்தானின் மருத்துவம் மற்றும் பல் மருத்வ கவுன்சில் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ”ஆப்கானிஸ்தான் மாணவர்களை நம் நாட்டின் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு புதிய அட்மிஷன்களும் வழங்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பல நூறு மாணவர்கள் பாகிஸ்தானில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளை படித்து வருகின்றனர். சிலர் இந்த படிப்புகளை முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
இதனால் பாகிஸ்தானில் பயிலும் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடந்து வருகிறது. இப்படியான சூழலில் ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் நாட்டில் வைப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கலாம். இதனால் தான் ஆப்கானிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் வெளியேற்றுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பாகிஸ்தானின் மூத்த அரசு அதிகாரி கூறுகையில், ”பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.இதனால் தான் ஆப்கானிஸ்தான் மாணவ-மாணவிகளை மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து வெளியேற்றவும், புதிய அட்மிஷன்கள் கொடுக்க வேண்டாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கன் மோதல் பின்னணி
பாகிஸ்தானின் இந்த உத்தரவுக்கு முக்கிய காரணம் தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தான். இந்த ‘தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான்’ என்ற அமைப்பு ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பாகிஸ்தானில் நடந்து வரும் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியை அகற்றி ஆப்கானிஸ்தானை போல் தீவிரமாக ஷரியா சட்டத்தை பின்பற்றும் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது தான். இதனால் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவத்தை தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்துவார்கள்.
இந்த தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு தடை போட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அந்த கோரிக்கையை ஏற்கவே இல்லை. மாறாக தொடர்ந்து ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு வழங்கி வருகிறது. பாகிஸ்தானை தாக்க தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இருதரப்பும் மாறி மாறி எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்படி இருநாடுகள் இடையேயான மோதலாக உருவாகி உள்ள நிலையில் தான் ஆப்கானிஸ்தானின் மாணவர்களை மருத்துவ கல்லூரிகளில் இருந்து வெளியேற்றி உள்ளது பாகிஸ்தான்.
பிற நாட்டினருக்கு பொருந்தாது
மேலும் இந்த உத்தரவு என்பது பாகிஸ்தானில் பயிலும் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் டென்ஷனாகி உள்ளனர்.

