My vikatan short story about poor women an her fate | மல்லிகா – சிறுகதை

Spread the love

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திரும்புகையில், என்னையறியாமல் அந்த பெட்டிக்கடையை நோட்டமிட்டேன். அவள் அங்கேதான் நின்றிருக்கிறாள் இன்னமும். யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதைப் போல பதட்டத்துடன் இருப்பது தெரிந்தது.

பிரசாத் நேரே அந்த பெட்டிக்கடைக்கே போய் சிகரெட் வாங்கினான். நானும் அவனுக்குப் பின்னால் போய் நின்றேன். அப்பொழுது அந்தப் பெண் திடீரென இரண்டு தப்படி முன்னே வந்து, “அண்ணே… என்னைத் தெரியுதா? “ என்றாள்.

நான் ஒரு கணம் ஆடிப்போனேன். ஆமாம். அவள் மல்லிகாவேதான்.

இது என்ன கோலம்? ஏன் இந்த கோலம்? எனக்கு வார்த்தை வரவில்லை.

நான் திகைத்து நின்ற வேளையில் அவள் மேலும் முன்னால் வந்து என் கையைப் பற்றிக்கொண்டாள்.

“என்னை காப்பாத்துங்கண்ணே… என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போயிடுங்க. இல்லேன்னா நா செத்துடுவேண்ணா….” என்று அழ ஆரம்பித்தாள்.

பிரசாத் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தான். பெட்டிக்கடைக்காரன் கடையை விட்டு வெளியே வந்து என்னை உற்றுப் பார்த்தான். அங்கே நின்ற சிறு கூட்டமும் என்னையே முறைப்பதுபோல என் உடம்பெல்லாம் குறுகுறுத்தது.

ஒரு வழியாக வாயைத் திறந்து பேசினேன். “என்ன ஆச்சு மல்லிகா? ஏன் இப்படி? உங்க அம்மா எங்கே?”

அவள் உடைந்து அழுதாள். “எங்க அம்மையாலதான் நான் இப்படி நிக்கேன் அண்ணே…. அவ கொடுமை தாங்கமத்தான் நா இப்படியாயிட்டேன்………” என்று தேம்பினாள்.

எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை.

அப்பொழுது அங்கே வந்தான் அந்த வாலிபன். இருபத்தி ஐந்து வயது இருக்கும். கல்லூரி மாணவன் போல உடையலங்காரம். சட்டையை இன் பண்ணி பெல்ட் அணிந்து பார்க்க டீசென்ட்டாக இருந்தான்.

வந்தவன் ஒரு கையால் என் சட்டையைப் பிடித்து என்னை எக்கித் தள்ளினான். மறு கையால் பளார் என்று மல்லிகாவின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். “ஐயோ …..: என்று அலறிய அவள் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள்.

“என்னாட்டீ.. புது சொக்காரன் வந்துட்டானா? அவனோட ஓடிப்போவலாமுன்னு ப்ளான் போடுதியா? கொடலை உருவிடுவேன்… நாயே….” என்று திட்டிவிட்டு, என்னை நோக்கித் திரும்பினான்.

“யார்லே நீ? என்ன பேசிகிட்டு இரிக்கே என் பெண்டாட்டிக்கிட்டே??? மருவதையா ஓடிடு… இல்லே உன்னை இந்த இடத்திலேயே பொலி போட்டுவேன்…..”என்று மிரட்டியதோடு தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு மடக்குக் கத்தியை எடுத்து விரித்தான்.

பிரசாத் என் கையைப் பிடித்து இழுத்தான், “வந்துடு போயிடலாம்…”

“அண்ணே என்னை விட்டுட்டு போயிடாதீங்க அண்ணே என்று மல்லிகா கதறினாள். அவளுக்கு மேலும் நான்கு ஐந்து அடி விழுந்தது அவள் கணவனிடமிருந்து.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நான் அவ்விடத்தைவிட்டு அகன்றேன்.

வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

என் கண்முன்னால் அந்த அற்புதப் பெண் சீரழிந்தாள்.

“என்னைக் காப்பாற்று” என்று கதறியபோதும் கையாலாகத மனிதனாக நான் ஓடி வந்துவிட்டேன்.

ஆண்டுகள் பல கடந்துவிட்டன. மல்லிகாவின் நினைவு வந்தாலே என் மனம் கனத்து நான் துவண்டு போய்விடுகிறேன். இப்போதும் திடீரென்று மல்லிகா என் கனவில் வருகிறாள். சிரிக்கச் சிரிக்க பேசுகிறாள். திடீரென்று “என்னைக் காப்பாத்த மாட்டியா?” என்று கதறுகிறாள். அவளது கைகள் என்னை நோக்கி நீள்கின்றன

நானோ அவளிடமிருந்து தப்பி ஓட எத்தனிக்கிறேன். என் கால்கள் கல்லாய் போயின; நகர மறுக்கின்றன

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *