Nanayam Vikatan – 02 August 2026 – முதலீட்டு வாய்ப்புகள்: மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு.. முதலிடத்துக்கு முன்னேற முதல்வர் செய்யவேண்டியவை! | industrial investment in 3rd place in tamilnadu

Spread the love

நலத் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனப் பல விஷயங்களில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது. பல்வேறு தேசிய அமைப்புகளின் மதிப்பீடுகளிலும் தொடர்ந்து அது வெளிப்பட்டு வருகிறது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகிறது.

‘நிலையான வளர்ச்சி இலக்கு (SDG), முதலீட்டுக்கு உகந்த மாநிலம், ஏற்றுமதி தயார் நிலை போன்ற பல்வேறு குறியீடுகளில், தமிழ்நாடு தொடர்ந்து முதல் ஐந்து மாநிலங்களுக்குள் இடம்பிடித்து வருகிறது’ என்கிறது நிதி ஆயோக் மதிப்பீடு. குறிப்பாக, முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது பெருமைக்குரியதாக இருந்தாலும், முதலிடத்துக்கு ஏன் நம்மால் முன்னேற முடியவில்லை என்ற கேள்வியும் முக்கியமாகிறது.

அதற்கான பதிலையும் நிதி ஆயோக்கின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் தொழில்துறை அடித்தளம் வலுவாக இருந்தாலும், அதன் திறனை முழுமையாகப் பயன்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அதே வேகத்தில் வளரவில்லை. சரக்குப் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்; சேமிப்புக் கிடங்குகள், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகள் பெரிய அளவில் உருவாக்கப்பட வேண்டும். பொதுவாக, உலகளாவிய நிறுவனங்கள் ஒரு மாநிலத்தை முதலீட்டுக்காகத் தேர்வு செய்யும்போது, தொழிற் சாலைக்கு நிலம் கிடைக்கிறதா என்பதைவிட, தயாரித்த பொருளை எவ்வளவு விரைவாக உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதையே அதிகம் பார்க்கின்றன. அந்தப் போட்டியில் தமிழ்நாடு வலுவடைய வேண்டியுள்ளது.

ஆட்டோமொபைல், மின்னணு உற்பத்தி, டெக்ஸ்டைல், தோல், பொறியியல் பொருள்கள் எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் ஏற்றுமதி சக்தியாக திகழ்கிறது. இருப்பினும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் வேகமாக மாறிவரும் சூழலில், துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து, குளிர்சாதன சேமிப்பு, பன்முக லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் போன்றவற்றில் அடுத்தகட்ட முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் ‘உலகின் மிகச் சிறந்த உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையம்’ என்ற இலக்கை நோக்கி நாம் நகர வேண்டியது அவசியம். அதற்கான பொது முதலீடு, தனியார் முதலீடு, கொள்கை சீர்திருத்தங்கள் அனைத்தும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

அதற்கு முதலில், நம் நிதிநிலை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளில் மேம்பாடு தேவை. இரண்டாவது, மின்துறை மற்றும் கனிமவளத் துறை சீர்திருத்தம், நீண்டகால கொள்கை முன்னுரிமையாக இருக்க வேண்டும். மூன்றாவது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றும் சதவிகிதத்தை நிலைநிறுத்தி, புதிய ஒப்பந்தங்களையும் அதிகரிக்க வேண்டும்.

அடித்தளம், இப்போது நம்மிடம் உள்ளது. தமிழக முதல்வர் விஜய், தொலைநோக்குடன் அடுத்தகட்ட வளர்ச்சிகளைக் கட்டமைக்க வேண்டும். உலக முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழ்நாடு என்று சொல்ல வைப்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *