Nanayam Vikatan – 17 May 2026 – புதிய அரசு: காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்! | challenge in new tamilnadu government

Spread the love

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில், தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை, குழப்பமான கூட்டணிக் கணக்குகள், ஸ்திரமான ஆட்சியின் மீதான சந்தேகம் ஆகிய அனைத்தும் சேர்ந்து மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தைப் பற்றிய கவலையை அதிகரித்துள்ளன.

‘அமையவிருக்கும் அரசு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் தொடர வைக்குமா அல்லது கடன் அதிகரிப்பு, வேலை இழப்பு, நிதி அழுத்தம் ஆகியவற்றின் சுழலில் தள்ளுமா?’ என்பது இந்தத் தருணத்தின் முக்கியக் கேள்வி.

தமிழ்நாடு தற்போது நாட்டிலேயே பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.35.67 லட்சம் கோடி. வளர்ச்சி விகிதம் 10.8%; இது இந்திய சராசரியைவிட அதிகம்.

இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், மின்வாகனம், ஐ.டி, ஏற்றுமதி மற்றும் தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் நாட்டிலேயே முதலிடம் என நடைபோடுகிறது. இந்த வலுவான பொருளாதார அடித்தளத்தைத் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வது, அமையவிருக்கும் அரசுக்கு உள்ள மிகப்பெரும் பொறுப்பு. தவறான முடிவுகள் எடுத்தால், ‘முன்னிலை’ என்ற இடம் சில ஆண்டுகளில் சரிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு அரசின் கடன் ரூ.9.3 லட்சம் கோடி. கடன் தவறல்ல; ஆனால் அதன் அளவும், அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுமே முக்கியம். உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் பூங்காக்கள், உற்பத்தி மையங்கள் போன்ற எதிர்காலத்தில் வருமானத்தைக் கொண்டுவரும் விஷயங்களுக்கான கடன்கள் அவசியமானவையே. ஆனால், அரசியலுக்காக அறிவிக்கப்பட்ட இலவசங்கள், வருவாயைக் குறைக்கும் வகையிலான திட்டங்கள் ஆகியவற்றால் உருவாகும் கடன்கள், பெரும் சுமையாக மாறும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிதிச் சிக்கல் என்னவென்றால், அரசின் வருவாயில் பெரும் பகுதி கடனுக்கான வட்டி செலுத்தவும், பழைய கடன்களை அடைக்கவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் புதிய முதலீட்டு செலவினங்களுக்கான வெளி குறைகிறது. இந்தச் சூழலில் கடனும் அதிகரிக்காமல், வளர்ச்சியையும் தக்கவைக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலமான தொழில் முதலீடுகள் எந்த வகையிலும் அரசியலால் பாதிக்கக் கூடாது. அதிகரிக்கும் வேலை இழப்பு, விலைவாசி ஏற்றம், தொழில்துறையை பாதிக்கும் சர்வதேச காரணிகள் எனப் பல முக்கியப் பிரச்னைகள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன. எனவே, நீண்டகால இலக்கு அடிப்படையிலான நலத்திட்டங்கள் மற்றும் வீண்செலவு கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

கடனைக் கட்டுப்படுத்தி, அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் புதிய அரசு. தமிழ்நாட்டின் ‘ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ இலக்கு நிறைவேற வேண்டும்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *