நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் நடப்பது வாடிக்கை. ஆனாலும் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, காவல்துறை ஆகியோர் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் அமைதியான சூழல் நிலவியது. இந்த நிலையில், மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் மீண்டும் அத்தகைய சூழல் உருவாகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “மாணவர்களுக்குள் வகுப்பறையில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டைதான் இது. இதில் எந்தவிதமான சாதிய பின்னணியும், சாதிய மோதலும் இல்லை. எந்த முன் விரோதத்தாலும் இந்த முதல் நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.
இந்த மோதல் தொடர்பாக தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், “என் மகன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் சக மாணவனால் தாக்கப்பட்டுள்ளார். என் மகனை சில வாரங்களாகவே குறிப்பிட்ட மாணவன் அடிப்பது, அவதூறாகப் பேசுவது, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவது என தொந்தரவு செய்து வந்துள்ளார். அதை எதிர்த்துக் கேட்டதால் கடுமையாக தாக்கியுள்ளனர். என் மகனின் காதில் ரத்தம் வந்துகொண்டிருக்கிறது. இது ஒரு மாணவன் செய்திருக்க முடியாது. இதன் பின்னணியில் உள்ள மாணவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.