Shashank Singh: சமையல்காரர் மீது தாக்குதலா? – போலீஸில் அளிக்கப்பட்ட புகார்; சஷாங் சிங் விளக்கம்!

Spread the love

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஐபிஎல் கிரிக்கெட் நட்சத்திரம் சஷாங் சிங் வீட்டில் சமையல்காரராக வேலை செய்தவர் விபேந்திரா சிங் தோமர் (31). இவர் போபால் காவல் நிலையத்தில் சஷாங் சிங் மீதும், அவரின் தந்தை மீது புகாரளித்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் புகாரில், “மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த நான், போபாலின் மெண்டோரி கிராமத்தில் உள்ள சஷாங் சிங் குடும்பத்தின் இல்லத்தில் சமையல்காரராக சமீபத்தில்தான் பணியில் சேர்ந்தேன். பணியின் முதல் நாளிலேயே அங்குள்ள கடுமையான பணிச்சூழலைக் கண்டும், வேலைப்பளு அதிகமாக இருப்பதைக் கண்டும், அங்கு எனக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று முதலாளியிடம் தெரிவித்தேன். அப்போது, அவர்கள் என் மொபைல் போனை பறித்துக்கொண்டார்கள்.

விபேந்திரா சிங் தோமர்
விபேந்திரா சிங் தோமர்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஷைலேஷ் சிங் `நீ ஏன் இங்கு வந்தாய்? என்னைக் கொலை செய்ய வந்தாயா அல்லது திருட வந்தாயா? உன்னை நான் விசாரணைக்கு உட்படுத்துவேன், நீ குறைந்தது ஒரு மாதமாவது இங்கு வேலை செய்ய வேண்டும். உன்னைப் போன்ற பலரை நான் சுட்டுள்ளேன்’ என்று கூறி அச்சுறுத்தினார். எனது போனைத் திரும்பத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் இரண்டு நாட்கள் வேலை செய்தேன். ஆனால் போன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பயந்துபோய் என்னை ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்டு போனைத் திரும்பக் கேட்டேன். அப்போது, அந்த வீட்டின் ஓட்டுநர் கதவை உடைக்க முயன்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் கதவைத் திறக்குமாறு கூறினார்.

அவர் படித்தவர், எனக்கு உதவுவார் என்று நம்பி கதவைத் திறந்தபோது, சஷாங் சிங் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் சேர்ந்து என்னை மிகக் கொடூரமாகத் தாக்கினார்கள். தொடர்ந்து சஷாங் சிங்கின் தந்தை மற்றும் அவரின் சகோதரியும் சேர்ந்து கொண்டு, என்னைத் தடியாலும், காலணிகளாலும், கைகளாலும் சரமாரியாகத் தாக்கினார்கள். என்னை விடுவிப்பதற்காக என் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் பறித்துக்கொண்டார்கள். மூன்று நாட்கள் அங்கு சாப்பிட்ட உணவிற்கான பணத்தைக் கொடுக்குமாறு வற்புறுத்தியதால், எனது மைத்துனர் அனுப்பிய ரூ1,000 தொகையை அவர்களிடம் கொடுத்தேன்.

விபேந்திரா சிங் தோமர்
விபேந்திரா சிங் தோமர்

இதனைத் தொடர்ந்து, என்னிடமிருந்து ஒரு கட்டாய வாக்குமூலத்தை எழுதி வாங்கிய பிறகே அவர்கள் என்னை விடுவித்தனர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர்கள் நான் செய்த வேலைக்கான ஒரு ரூபாய் கூட சம்பளமாக வழங்கவில்லை.” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ரதிபாட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் மற்றும் அவரது தந்தையுடன், குடும்ப ஓட்டுநரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சமையல்காரரின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் அளித்த விளக்கத்தில், “நாங்கள் அவரை சிறைபிடித்து வைக்கவில்லை… அவர் சமையல்காரர் என்று கூறிக்கொண்டு இங்கு வந்தது உண்மைதான், ஆனால் அவருக்கு சமையல் செய்யவே தெரியாது. அவர் ஒரு சமையல்காரரே இல்லை. அவர் இங்கு வேடிக்கை பார்க்கவும், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கவும், ஏன் எனது அறைக்குள்ளேயே நுழையவும் செய்துகொண்டிருந்தார். அவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், அவர் திருடும் நோக்கத்தோடுதான் வந்தாரோ என்று நான் சந்தேகிக்கிறேன். நாங்கள் இதுவரை சரிபார்த்த வரையில் எந்தப் பொருளும் திருடப்படவில்லை என்பது எங்கள் அதிர்ஷ்டம்.

அவரது மொபைல் போனில் எங்கள் வீட்டின் வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தது உண்மைதான், அவை மிகவும் தனிப்பட்டவை என்பதால் அவற்றை நீக்குமாறு என் தாயார் அவரிடம் கூறினார்.

Shashank Singh
Shashank Singh

இதுவரை போலீசார் எங்களை அணுகவில்லை. அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்தபோது, 100 என்ற எண்ணை அழைத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு என் சகோதரி கூறினார். ஆனால், அவர் எங்களிடம் கெஞ்சியதால் நான் அவரைப் போகவிட்டேன்.

என் மீது யாராவது இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கம்தான். ஆனால், என்னைப் பற்றித் தெரிந்த எவருக்கும், நான் இப்படி வன்முறையில் ஈடுபடவே மாட்டேன் என்பது நன்றாகத் தெரியும். நான் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூட தயங்குபவன். அப்படி இருக்கையில் என்னால் நிச்சயமாக இப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. இது குறித்து நான் எந்த ஒரு விளக்கமும் அளிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *