நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.
இதில் கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏனென்ஸி சுற்றுலா டிராவல்ஸ் மூலம் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் நேபாள் கைலாஷ் யாத்திரை சென்றனர்.
மூன்று மினி பேருந்துகளில் சென்ற நிலையில் ஒரு பேருந்து மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பியதாகச் சொல்கிறார்கள். மற்ற பேருந்துகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
கும்பகோணம் டிராவல்ஸ் மூலம் சென்ற 16 பேரின் நிலை என்னவென்றும் அவர்கள் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வெள்ளத்தில் மாயமானவர்களை அடையாளம் கண்டறிய நேபாள அரசு டி.என்.ஏ பரிசோதனை தரவுகளைக் கேட்டிருந்தது.
அதன்படி, தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தடய அறிவியல் மூலம் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.