அந்த இரண்டு பஸ்ஸில் பயணித்த 37 பேரின் நிலைமை என்ன, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 16 பேர் கைலாஷ் யாத்திரை சென்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி, யாத்திரை சென்றவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களைச் சேர்த்து வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியிருக்கிறார். நேபாள் வெள்ளப்பெருக்கு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அதில் உடனே பகிர்கிறார். இதன் மூலம் மீட்புப் பணிகள் எந்த அளவில் நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதாக அந்தக் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.
தஞ்சாவூரைச் சேர்ந்த இளவரசி என்பவர் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் சென்றுள்ளார். அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் முரளி கூறியதாவது, “என் அம்மா கும்பகோணம் ஏஜென்ஸி டிராவல்ஸ் மூலம் புனித யாத்திரை சென்றார். நேபாளம் கைலாஷ் யாத்திரை செல்ல வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. இதற்காக அவரே பணம் சேமித்து வைத்து கைலாஷ் யாத்திரை சென்றார்.
நேற்று காலையில் போனில் பேசினார். கடைசியாக எடுத்த போட்டோவை எங்களுக்கு அனுப்பினார். அக்காக்கிட்ட ரொம்ப ஜாலியா பேசியவர், எல்லாம் நல்ல போவதாகச் சொன்னார். ஆனால் அதன் பிறகு நடந்தவை எல்லாம் எங்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான சூழலில் அரசு எங்களுக்கு சப்போர்ட் செய்கிறது. கலெக்டர் ரேவதி மேடம் கிடைக்கின்ற தகவலை எங்களுக்குத் தெரிவிப்பது ஆறுதலாக உள்ளது. அம்மா திரும்பி வருவாங்கணு நம்பிக்கையோட காத்திருக்கோம்” என்றார்.