International
oi-Vignesh Selvaraj
காத்மண்டு: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நாட்டையே உருக்குலைத்து 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நேபாளத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளம் – திபெத் எல்லையில் உள்ள இமயமலையின் லாங்டாங்லிருங் பனிச்சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி உடைந்தது. இதன் காரணமாக நேபாளத்தின் போடே கோஷி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

பாறைகள், மண், சேறு சகதியுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் என வழியில் இருந்த அனைத்தையும் வாரிச் சுருட்டிச் சென்றது. ரசுவா, நுவாகோட், தாதிங் ஆகிய மாவட்டங்களை இந்த பெருவெள்ளம் புரட்டிப் போட்டது.
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இவர்களில் ஏராளமானோர் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டு மீட்புக்குழுக்களின் உதவியோடு மாயமானவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
நேபாளத்தில் நேற்று 9-வது நாளாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்தது. கடும் வெள்ளத்தால் ரசுவா, நுவாகோட் பள்ளத்தாக்குகளின் அடையாளங்கள் அழிந்து புவியியல் அமைப்பே மாறியதால், மீட்புப் பணிகளில் மிகப்பெரிய சவால் நிலவுகிறது.
இந்த வெள்ளத்தில் போடே கோஷி, திரிசூலி நதிகளின் குறுக்கே இருந்த நீர்மின் நிலையத்தின் சுரங்கங்கள் உருகுலைந்தன. இந்த நீர்மின் நிலையங்களில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
திரிசூலி நீர்மின் நிலையத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கடந்த 9 நாட்களாக நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் இந்திய சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணர் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், 9 நாட்ளுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவரை இன்று காலை நேபாள ராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் திரிசூலி நீர்மின் திட்ட அதிகாரிகள் சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரையும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்கள் சுவாசிக்க அதிகளவில் ஆக்சிஜன் வாயுவையும் குழாய் மூலம் நேபாள மீட்புக் குழுவினர் செலுத்தி வருகின்றனர். 9 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம், நேபாள வெள்ளத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை ஒளி அளித்துள்ளது.