அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நைஜீரிய அரசு நீண்டகாலமாகவே போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் பிராந்தியக் கிளைகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. அத்துடன், அங்குள்ள வன்முறைக் கும்பல்களுக்கு எதிராகவும் அந்நாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நைஜீரியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நைஜீரியாவின் வடமேற்கு சோகோடோ (Sokoto) மாகாணத்தில் அண்டை நாடான நைஜரில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் நைஜீரியாவும் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. அதன் தொடர்ச்சியாக, நைஜீரியப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும் ஆதரவு வழங்கவும் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்கப் படைகளும் நைஜீரியப் படைகளும் இணைந்து திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கையை மிகச் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். உலகிலேயே மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் இதன் மூலம் ஒழிக்கப்பட்டிருக்கிறார். ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்த அபு-பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவில் பதுங்கியிருந்தால் தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அவரது நடமாட்டங்களை அமெரிக்க உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்து வந்தது.

அவரது மறைவு ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய இயக்கத்திற்குப் பேரடியாக இருக்கும். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வந்த இந்த பயங்கரவாதி, இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடவோ முடியாது. மேலும், இந்தச் சிக்கலான ராணுவ நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நைஜீரிய அரசுக்கும் அதன் ராணுவத்திற்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கொல்லப்பட்ட அபு-பிலால் அல்-மினுகி, ஐஎஸ் அமைப்பின் நிதி மற்றும் செயல்பாடுகளை உலகளவில் ஒருங்கிணைக்கும் நிர்வாகக் குழுவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பதால், கடந்த 2023-ம் ஆண்டிலேயே இவரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. மேலும், பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தது. இருப்பினும், தற்போதைய தாக்குதல் வான்வழியாக நடத்தப்பட்டதா அல்லது தரைவழித் தாக்குதலா என்பது குறித்த கூடுதல் விவரங்களை அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை.