ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 16) ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அணியின் அபாரமான வளர்ச்சி குறித்துப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்.
வெற்றி குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், “நாங்கள் விளையாடி வரும் விதம் எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. அதே சமயம் நாங்கள் வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் மிகவும் நிதானமாகவே இருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நினைத்தபடியே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்தை எந்த நேரத்திலும் எங்கள் பக்கம் திருப்பும் அந்தத் திறமை எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது.

கடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கூட நாங்கள் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக மீண்டு வந்தோம். தொடர்ந்து டாஸ் வெல்வது எனக்கு அதிர்ஷ்டமாக இருக்கிறது.
ஒவ்வொரு போட்டியிலும் எங்களை நாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் எங்களின் வெற்றி ரகசியம். மைதானத்திற்கு அதிக அளவில் வந்து எங்களை உற்சாகப்படுத்தும் ரசிகர்களைப் பார்ப்பது ஆட்டத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குகிறது” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.