மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.
குறிப்பாக, டக்-அவுட்டில் அமர்ந்திருந்த மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மாவும், சூர்யகுமார் யாதவும் அந்தக் கேட்சைப் பார்த்து வாயடைத்து நின்ற தருணம், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தப் பிரமிக்க வைக்கும் ஃபீல்டிங் நிகழ்ந்தது. மார்கோ ஜான்சன் வீசிய 18வது ஓவரில், மும்பை அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா முந்தைய பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டிக்கொண்டிருந்தார்.
ஓவரின் மூன்றாவது பந்தையும் அவர் சிக்ஸருக்கு விரட்ட, அது நிச்சயம் எல்லைக்கோட்டைத் தாண்டும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், லாங்-ஆன் திசையில் இருந்து புயலென ஓடிவந்த ஷ்ரேயஸ் ஐயர், காற்றில் பறந்து பந்தை ரிவர்ஸ்-கப் முறையில் பிடித்தார்.
தரையில் விழுந்து, எல்லைக்கோட்டைத் தொடுவதற்குள், சமநிலையை இழக்கும் முன், அருகே இருந்த சக வீரர் சேவியர் பார்ட்லெட்டிடம் பந்தைத் தூக்கி எறிந்து கேட்ச்சை முழுமையடைய செய்தார்.
ஷ்ரேயஸின் இந்த அசாத்திய முயற்சியைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் டக்-அவுட் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனது. ரோஹித் ஷர்மா தனது வாயில் கைவைத்து ஆச்சரியத்தில் உறைந்து நின்றார்.
சூர்யகுமார் யாதவ்வின் முகத்திலும் அதே அதிர்ச்சியும் பிரமிப்பும் வெளிப்பட்டது. ஸ்கோர்கார்டில் ஹர்திக் பாண்டியா “கேட்ச் பார்ட்லெட்’ என்று குறிப்பிடப்பட்டாலும், இந்த விக்கெட்டின் முழு பெருமையும் ஷ்ரேயஸ் ஐயரையே சாரும்.
கேட்ச் பிடித்த பிறகு, மும்பை ரசிகர்களைப் பார்த்து கைதட்டுமாறு ஷ்ரேயஸ் சைகை செய்தது, அந்தத் தருணத்தின் உணர்ச்சிப்பூர்வமான உச்சமாக அமைந்தது. ‘சீசனின் சிறந்த கேட்ச்’ என ரசிகர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
இந்த அபாரமான கேட்ச் ஒருபுறம் இருந்தாலும், போட்டி மும்பை இந்தியன்ஸுக்குச் சாதகமாக அமையவில்லை. முன்னதாக, பேட்டிங் செய்த மும்பை அணி, தடுமாற்றமான தொடக்கத்தைக் கண்டது. வெறும் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக களமிறங்கிய குவின்டன் டி காக், தனி ஒருவராக அணியைத் தாங்கினார்.