Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

Spread the love

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!”

இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. உண்மையில், இன்றைய இளைஞர்களின் சேமிப்புப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

முதலில், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தைக் கவனிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள், “இப்போதைய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். பயணம், உணவு, பொழுதுபோக்கு, தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை அவர்களது வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இது வெறும் ஆடம்பரம் அல்ல; அவர்களுக்கான வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஒரு முயற்சியாகவே அவர்கள் இதைப் பார்க்கின்றனர்.

இரண்டாவது முக்கியக் காரணம், குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றம். பல குடும்பங்களில் ஒரே குழந்தை என்ற நிலை அதிகரித்துள்ளது. இந்தக் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே அதிக அன்பும் சுதந்திரமும் பெற்றவர்களாக வளர்கிறார்கள்.

அவர்கள் விரும்பிய பல விஷயங்கள் எளிதில் கிடைத்ததால், “விருப்பம் வந்தால் வாங்கலாம்” என்ற மனநிலை இயல்பாகவே உருவாகிறது. இந்த மனநிலை, வேலைக்குச் சென்ற பிறகும் தொடர்வது ஆச்சரியமல்ல.

ஆன்லைன் ஷாப்பிங்...
ஆன்லைன் ஷாப்பிங்…

ஆனால், இளைஞர்களை மட்டும் குறைசொல்வது நியாயமில்லை. இன்றைய பொருளாதாரச் சூழலும் ஒரு முக்கிய காரணம். வீட்டு வாடகை, கல்வி செலவு, மருத்துவச் செலவு போன்றவை கடந்த காலத்தைவிட மிகவும் அதிகரித்துள்ளன. 50,000 ரூபாய் சம்பளம் கூட பெரிய நகரங்களில் போதுமானதாக இல்லாத நிலை உள்ளது. இந்தச் சூழலில் சேமிப்பு என்பது சுலபமான காரியம் அல்ல.

மேலும், சமூக ஊடகங்களின் தாக்கமும் மறுக்க முடியாத ஒன்று. இணையத்தில் தொடர்ந்து காணப்படும் ஆடம்பரமான வாழ்க்கை முறை, பலரிடமும் ஒப்பீட்டு மனநிலையை உருவாக்குகிறது. “நாமும் இப்படியே வாழ வேண்டும்” என்ற எண்ணம் செலவுகளை அதிகரிக்கச் செய்கிறது.

இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, நிதி அறிவு பற்றாக்குறை. சேமிப்பு, முதலீடு, அவசர நிதி, வட்டி ஆகிய அடிப்படை நிதி கருத்துக்கள் பலருக்கும் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. இதனால், பணத்தை நிர்வகிக்கும் திறன் குறைவாகிறது.

இன்றைக்குப் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், வரும் வருமானத்தை எல்லாம் செலவு செய்து ஜாலியாக இருப்பவர்கள் எதிர்காலத்தில் என்னென்ன அபாயங்களில் சிக்க வேண்டியிருக்கும்?

1. கடனில் சிக்கி சீரழியும் அபாயம்

உண்மையில் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்துக்கும் எதிர்காலத்திற்காக அவர் பணம் சேர்த்துவைப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 1.5 லட்சம் ரூபாய் வாங்கிற ஒருவர் கடனில் வாழ்க்கையை நடத்துகிறார். ரூ. 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் ஒருவர் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கிறார் எனில், என்ன காரணம், முதலாமவர் வருமானத்தை எல்லாம் இஷ்டம் போல செலவு செய்து ஜாலியாக இருக்கிறார்.

இரண்டாமவர், கொஞ்சம் சிக்கனமாக இருந்து, எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்கு மட்டுமே செலவு செய்து, சேமிக்கிறார்.

கடன் நிர்வாகம்
கடன் நிர்வாகம்

எதிர்காலத்திற்காகக் கொஞ்சம் பணத்தையாவது சேமிப்பவருக்குத் திடீர் செலவு வந்தால், கடன் வாங்க மாட்டார்கள். கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் அவர் சேர்த்து வைத்திருக்கும் எமர்ஜென்ஸி பணத்தில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வார்கள். இதனால், வட்டி கட்டி பணத்தை இழக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்படாது. ஆனால், எந்தப் பணத்தையும் சேமிக்காமல் இருப்பவர்களுக்குத் திடீர் செலவு வந்தால், கடன் வாங்கித்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டி இருக்கும்.

இன்றைய நிலையில், பர்சனல் லோன் வாங்க வேண்டும் எனில், 12% வட்டி கட்ட வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் எனில் ஒரு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வட்டி கட்ட வேண்டும். எதிர்காலத்துக்குத் தேவையான பணம் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால், இந்த 12 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டாமல் தவிர்த்துவிடலாம் இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பார்ப்பது நல்லது!

ஓய்வுக் காலம்
ஓய்வுக் காலம்

2. எதிர்காலத் தேவைக்கான பணத்தைச் சேர்க்க முடியாமல் போகும் அபாயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் பல விதமான எதிர்காலத் தேவைகள் இருக்கும். உதாரணமாக, குழந்தைகளின் உயர்கல்வி; திருமணம். இந்த இரண்டையும்விட முக்கியமானது, ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பது.

குழந்தைகள் நன்றாகப் படிக்கக் கூடியவர்களாக இருக்கும்பட்சத்தில், உயர்கல்விக்கு அதிகமான பணத்தைக்கூட செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குழந்தைகளின் திருமணத்தைக்கூட சிக்கனமாக நடத்தி முடித்துவிடலாம். இன்றைக்குப் பலரும் சிக்கனமாகவே தங்கள் குழந்தைகளின் திருமணத்தை நடத்தி முடிக்க விரும்புகின்றனர். ஆனால், ஓய்வுக் காலம்…?

ஓய்வுக் காலத்தில் ஒருவருக்கு வருமானமும் இருக்காது; கடனும் கிடைக்காது. இந்த நிலையில், ஏற்கெனவே பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே ஒருவரால் ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

மகனோ/மகளோ நல்ல நிலையில் அவர்கள் தரும் பணத்தை மட்டும் வைத்து வாழ்க்கையை ஓட்டவேண்டும் என்பது ஒரு பெற்றோருக்குத் தர்மசங்கடமான நிலைதான்.

எனவே, அப்படி ஒரு நிலை வராமல் இருக்க, இளம் வயது முதலே தங்களால் முடிந்த அளவுக்குக் கொஞ்சம் பணத்தை ஓய்வுக் காலத் தேவைக்காகச் சேர்த்து வைப்பது நல்லது!

சொந்த வீடு
சொந்த வீடு

3. சொத்து சேர்க்க முடியாமல் போகும் அபாயம்!

மாதந்தோறும் வரும் சம்பளத்தை எல்லாம் செலவு செய்பவர்களால், வீடு, கொஞ்சம் தங்க நகைகள், எதிர்காலத்திற்குத் தேவையான பணம் என எதையும் சேர்க்க முடியாது. இதனால் எதிர்காலத்தில் நிராதரவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

நம் வாழ்க்கையானது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் வாழ்க்கையைப் போல அல்ல. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டால், அவர்கள் தனியாகச் சென்று வாழ ஆரம்பித்துவிடுவார்கள். அதற்குப்பிறகு அவர்களைப் பற்றி பெற்றோர்களும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். இதனால்தான் அவர்கள் சொத்து சேர்க்க பெரிய அளவில் விரும்புவதில்லை.

ஆனால், ஆசியாவில் அதிலும் குறிப்பாக இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குடும்பத்திற்கு அவசியம் ஒரு வீடு வாங்கி வைக்க வேண்டும். கொஞ்சம் தங்க நகையை வாங்கி வைக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக 20, 30 ஆண்டுகளுக்கு யாரையும் எதிர்பார்த்திருக்காமல் செலவு செய்ய வேண்டும் பணம் வேண்டும்.

இன்றைக்கு ஜாலியாக இருக்க நினைப்பவர்களால் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தைச் சேர்த்து வைக்க முடியாது. சொத்து சேர்த்து வைக்காமல் போகும் ஒரு தகப்பனை அவனது குழந்தைகள் பெரிய அளவில் மனதில் கொள்ள மாட்டார்கள்.

ஆக, இந்த மூன்று தவறுகளையும் செய்து, அபாயங்களில் சிக்காமல் இருந்தாலே போதும்; எதிர்காலத்தில் பணம் தொடர்பான எந்தப் பிரச்னையும் சிக்க வாய்ப்பே இல்லை. இந்த அபாயங்களில் ஒருவர் சிக்காமல் இருக்க வேண்டும் எனில், உங்கள் எதிர்காலத்திற்குத் தேவையான கொஞ்சம் பணத்தையாவது இன்றே, இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *