PM கேர்ஸ் நிதி.. சும்மா எதுக்கு பேங்குல இருக்கு? குடைச்சலை தொடங்கிய கரப்பான் கட்சி! மத்திய அரசு ஷாக் | PM CARES Fund Could Build 1,000 Schools with ₹8,452 Crore, Says Abhijeet Dipke

Spread the love

India

oi-Halley Karthik

மும்பை: பள்ளிகளை சீரமைப்போம் என்கிற பிரச்சாரத்தை கரப்பான் ஜனதா கட்சி (CJP) மேற்கொண்டிருக்கிறது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளை CJP தலைவர் அபிஜித் தீப்கே பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஎம் கேர்ஸ் நிதியை அரசு பள்ளிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை கொண்டு சுமார் 8,000 நவீன பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

தீப்கே தனது சொந்த ஊரில் உள்ள ஜில்லா பரிஷித் பள்ளியில் ஆக.15 அன்று கள ஆய்வை மேற்கொண்டிருந்தார். அரசு பள்ளிகளின் லட்சணம்தான் ஊர் உலகத்திற்கே தெரிந்ததே! மகாராஷ்டிராவிலும் அரசு பள்ளிகளின் தரம் ரொம்பவும் மோசமாகத்தான் இருந்தது.

PM CARES Fund

அரசு பள்ளிகளின் அவலநிலை

பாத்ரூம் இருக்கு.. கதவு இல்லை, தண்ணீர் இல்லை, சுத்தமாக இல்லை. விளையாடுவதற்கு மைதானம் இல்லை, மத்திய உணவு தயாரிக்க சமையலறை இருக்கு. ஆனா, ஆதாம் ஏவாள் வாழ்ந்த ஆதி காலத்து குகை மாதிரி இருக்கு. இப்படியெல்லாம் இருந்தா அரசு பள்ளிக்கூடத்துல படிக்க யார் வருவா? என்று கேள்வி எழுப்பிய தீப்கே! இதை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

பிஎம் கேர்ஸ் நிதி

மேலும், அரசு பள்ளிகளை சரி செய்ய.. பிஎம் கேர்ஸ் நிதியை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கொரோனா காலத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. எனவே அதை அரசு பள்ளிகளை மேம்படுத்த செலவழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

8,000 பள்ளிகள்

மேலும் அவர் கூறியதாவது, “சமீபத்திய அறிக்கையின்படி கடந்த 2023-2024ம் ஆண்டில் பிஎம் கேர்ஸ் நிதி ரூ.7,173 கோடியாக இருந்தது. இப்போது 2024-25ல் ரூ.8,452 கோடியாக நிதி உயர்ந்திருக்கிறது. ஒரு நல்ல தரமான பள்ளியை கட்ட ரூ.1 கோடி செலவாகும் என்று வைத்துக்கொண்டாலும், நாடு முழுவதும் இந்த நிதியை கொண்டு சுமார் 8,000 கிராமப்புற பள்ளிகளை கட்ட முடியும். அதிநவீன மாதிரி பள்ளிகளை கட்ட வேண்டும் எனில் ரூ.8 கோடி செலவாகும். அப்படியெனில் 1,000 மாதிரி பள்ளிகளை கட்ட முடியும்.

பிஎம் கேர்ஸ் நிதியில் பெரும்பகுதி பேங்கில் சும்மாதான் கிடக்கிறது. மறுபுறம் கிராமப்புற பள்ளியில் குடிநீர் வசதி கூட இல்லாமல் மாணவர்கள் கஷ்டபடுகிறார்கள். மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை தாங்களே சுத்தம் செய்யும் அவல நிலை நீடிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

சிதம்பர ரகசியம்

தீப்கே சொல்வதிலும் லாஜிக் இருக்கிறது. பிஎம் கேர்ஸ் நிதி என்பது சிதம்பர ரகிசயத்தை விட.. படு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. எவ்வளவு நிதி இருக்கிறது? யார் யார் கொடுத்தது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்க முடியாது. அதேபோல நாடாளுமன்றத்திலும் இது பற்றி கேள்வி எழுப்ப முடியாது. அவ்வளவு ஏங்க.. இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் (CAG) கூட.. இந்த அக்கவுண்டை தணிக்கை செய்ய முடியாது. இப்படி மூடு மந்திரமாக எதற்காக இவ்வளவு பெரிய நிதி பாதுகாக்கப்படுகிறது? அதை எடுத்து நல்ல விஷயங்களுக்கு செலவு செய்தால் என்ன? என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கரப்பான் ஜனதா கட்சி, இந்த நிதியை அரசு பள்ளிகளை மேம்படுத்த செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *