திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவில், ” சில போக்சோ வழக்குகளில் சொந்த பகையை தீர்க்க பொய்யாக பாலியல் புகாராக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க மாநிலம் முழுவதும் ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ பயிலரங்குகளை நடத்த தமிழக உள்துறை செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர் மற்றும் சட்டத்துறைச் செயலாளர் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்சோ சட்டத்தை கையாளுவதில் மென்மைப் போக்கு, குழந்தைகளின் உளவியல், தண்டனை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குழந்தைகளைப் பாதுகாக்கும் புனிதமான சட்டம். ஆனால் பெரியவர்களின் பழிவாங்கல்களுக்காகத் பயன்படுத்தப்படும் போது, உண்மையில் பாதிக்கப்படும் குழந்தைக்கு நீதி தள்ளிப்போகிறது.

குழந்தைப் பருவம் என்பது மிகவும் மென்மையானது. நீதிமன்றமும் காவல்துறையும் இயந்திரத்தனமாகச் செயல்படாமல், பரிவோடும், அரவணைப்போடும் நடக்க வேண்டும். போக்சோ சட்டத்தின் வெற்றி என்பது தண்டனையில் இல்லை. நீதி அமைப்பிலிருந்து வெளியே வரும் குழந்தை எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறது என்பதில்தான் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.