ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் மற்றும் சுரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென புழுதிப்புயல் வீசியது. அதிக வேகத்தில் இந்தப் புயல் வீசியதால், இப்பகுதிகள் முழுவதும் புழுதியால் சூழப்பட்டது.
இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளிலும் பலத்த காற்றுடன் வீசிய புழுதிப்புயலால் பகுதிகள் அனைத்தும் புழுதியால் சூழப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால், அப்பகுதியின் வானம் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது.
राजस्थान के चूरू में रेत का बवंडर… #Rajasthan #Churu #Storm #DustStorm #Sikar pic.twitter.com/7ayCzob9o1
— Naveen Parmuwal (@naveenparmuwal) May 30, 2026
குறிப்பாக, சுரு மாவட்டத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் புழுதிப்புயலால் மதியம் 2 மணிக்கே ஒட்டுமொத்தப் பகுதியும் இருட்டாக மாறி, நள்ளிரவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் பார்வைத்திறன் குறைவதால் பல வாகனங்கள் சாலையின் நடுவிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புழுதிப்புயல் பற்றி வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கையில், “ராஜஸ்தானில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இத்தகைய புழுதிப்புயல்கள் ஏற்படுவது வழக்கம்தான்.
குறிப்பாக, பாலைவனத்தின் கடுமையான வெப்பக் காற்றானது, வட இந்தியாவில் மாறிவரும் வானிலை அமைப்புகளுடன் இணையும்போது இது போன்ற தீவிர புழுதிப்புயல்கள் உருவாகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடுமையான புழுதிப்புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள முன்னறிவிப்பில், ராஜஸ்தானின் சில பகுதிகளில் வரும் நாட்களிலும் இத்தகைய வானிலை மாற்றம் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த சூறாவளிக்காற்று மற்றும் புழுதி கிளம்பும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.