Ramadoss Biopic: “அப்பா மகன் சண்டையால் கைவிடப்பட்டு, எங்கள் உழைப்பு வீண்" – இயக்குநர் சேரன் ஆதங்கம்

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், இதனால் தங்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது என்றும் இயக்குநர் சேரன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே படத்தின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி உருவாகியுள்ள ‘ஒன்’ (ONE) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சேரன், “மருத்துவர் ராமதாஸ் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை முதலில் திரைப்படமாக எடுக்க முயன்றவர் தம்பி சங்ககிரி ராஜ்குமார்தான்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அவர் அதற்கான கதையையும் குறிப்புகளையும் தயாரித்து வைத்திருந்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் என்னை அணுகியபோது, ‘ராஜ்குமாரே இந்தப் படத்தை இயக்கட்டும், நான் கூட இருந்து ஆதரவு தருகிறேன்’ என்றுதான் கூறினேன். ஏனெனில் ஒருவரது கனவை நான் தட்டிப்பறிக்க விரும்பவில்லை.

ஆனால், ராமதாஸ் ஐயாவின் அன்பையும் வேண்டுகோளையும் என்னால் தட்ட முடியாமல் போகவே, நான் அந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ராஜ்குமாரிடமும் நிலைமையை விளக்கிப் பேசினேன்.

1987-ம் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் என்பதால், அந்தக் காலக்கட்டத்திற்குரிய கிராமங்களையும், மனிதர்களையும் தேடி நானும் எனது 15 பேர் கொண்ட குழுவும் தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் அலைந்து திரிந்து லொகேஷன்களைத் தேர்வு செய்து, பல ஆய்வுகளை மேற்கொண்டோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ‘உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை’ என்ற கதையாக அந்தப் படம் இறுதியில் அப்பா மகன் சண்டையால் கைவிடப்பட்டது. இப்போது குடும்பம் சேர்ந்துவிட்டது. ஆனால் படம் எடுக்கவில்லை.

சேரன்
சேரன்

ஒரு படைப்பாளனுக்குச் சம்பளத்தை விடத் தன் கற்பனை திரையில் வர வேண்டும் என்பதே முக்கியம். அந்த வகையில் எங்களின் உழைப்பு வீணானது மிகப்பெரிய வலியைத் தந்துள்ளது.

சங்ககிரி ராஜ்குமார் ‘ஒன்’ (ONE) என்ற படத்தில் அனைத்துத் துறைகளையும் தானே ஏற்று 3-4 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார். ஒரே ஆள் நடித்து, ஒளிப்பதிவு செய்து, எடிட் செய்து, லைட்டிங் பார்த்து, சவுண்ட் ரெக்கார்ட் செய்து படம் எடுப்பது அசாத்தியமான விஷயம்.

வியாபார சினிமாக்களுக்கு நடுவே இதுபோன்ற நல்ல, புதுமையான முயற்சிகளை மக்களும் ஊடகங்களும் கொண்டாடாவிட்டாலும், இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து இவரது உழைப்பை இந்தத் தமிழ் சினிமா நிச்சயம் கொண்டாடும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *