கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். அப்போது இத்தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாடகி ஒருவருடன், ரவி மோகன் ஒன்றாக இணைந்து நிகழ்வுகளுக்கும், பொது இடங்களுக்கும் செல்வதால், அவர் மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு மேடையில் ஒன்றாக இணைந்து பாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அப்பாடகி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு மனிதரைக் காப்பாற்ற என்னையே நான் தியாகம் செய்தேன். ஆனால், இந்த உலகம் உண்மைக்கும் மென்மைக்கும் இடம் தராத ஒன்றாக இருக்கிறது.

திரைத்துறையினருக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அவர் இனி உங்கள் சொத்து. இனி எந்த விளக்கமும் இல்லை, அவருக்காகப் போரிடப் போவதும் இல்லை. அவரை முழுமையான விடுதலையுடன் வழியனுப்புகிறேன்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதன் பிறகு இவர் ரவி மோகனுடனான உறவிலிருந்து பிரிவதாக இந்தப் பதிவில் குறிப்பிடுகிறார் எனச் சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ரவி மோகன், “இவ்வளவு நாள் நான் பேசாமல் இருந்ததை முட்டாள்தனமானது என்றே நினைக்கிறேன். எனக்கு விவாகரத்து கிடைக்கிற வரைக்கும் என்னுடைய படம் திரையில் வெளியாகாது.
நான் நடிக்கப் போவதில்லை. ஏன்னா, என்னால நடிக்க முடியல. எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன நினைக்கிறாங்க அவங்க? எல்லாம் பண்ணலாம் நான் அமைதியாக இருப்பேன்னு நினைக்கிறாங்களா? நானும் பெண் என அமைதியாக இருந்தேன்.
என்ன பெமினிஸம்? பெமினிஸம் என்றால் என்னவென்று தெரியுமா? பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பற்றி படம் எடுத்தவன் நான். கண்டிப்பாக அதைச் செய்ய வேண்டும் என எடுத்தேன்.

பெண்களுக்கு உரிமை கிடைக்கணும்னு பேசியவன் நான். என்னுடைய அம்மா, என்னை அப்படி வளர்க்கல. இந்த ரெண்டு வருஷம் அமைதியாக இருந்தோம். உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். நானும் பெமினிஸ்ட்தான். 14 வருடம் திருமணம் வாழ்க்கையில இருந்தேன்.
எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருந்தேன். என்னுடைய குழந்தைகளைப் பார்க்கவிட மாட்டேங்குறாங்க! அவங்களுக்கு நல்ல லைஃப் கிடைக்கணும்னு நான் பார்த்துட்டு இருந்தேன். என் பாசத்தைப் பற்றி பேசாதீங்க. அந்தத் திருமண வாழ்க்கை பிடிக்கலைனு தெரிச்சுதான் ஓடி வந்தேன்.
உயிர் போகிற அளவுக்குச் சுரண்டினால் என்ன செய்வது. இணையவெளியில் தாக்குதல் நடத்தி, கெனிஷாவை அனுப்பிவிட்டீர்கள். உங்களை நான் சும்மாவிடப்போறதில்லை. நான் வாடகை வீட்டுல இருக்கேன். நான் கோடி கணக்குல செலவு பண்ணி கட்டின வீட்டுல அவங்க இருக்காங்க. கெனிஷா என்னை புரிஞ்சுகிட்டாங்க. ஆனால், அவங்களைப் பத்தி இணையவெளியில் விமர்சனம் பரப்பினாங்க.

என்னுடைய வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். எப்படி அழகுல மயங்கி போயிட்டாங்களா? அவங்களுக்கு ஒரு காரணம் தேவை, அவ்வளவுதான்! ஏற்கெனவே என்மேல கடன் உள்ளிட்ட வழக்குகள் இருக்கு. ஆனால், உங்களுக்காக நான் சிரிச்சுட்டு இருந்தேன். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தா, இப்படி வந்திருபேனா? 45 வயசுல அழகு பின்னாடி ஓடுற வயசா இது?
என் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. ஒன்று மட்டும் ஜாயிண்ட் கணக்காக இருந்தது. என்ன செலவு பண்ணினாலும் என்ன, ஏதுனு கேட்பாங்க. எனக்கு ரொம்ப அந்நியாயம் நடந்திருக்கு” என்றார்.