ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
”2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் சேர்த்த அனுபவம் ஐபிஎல் களத்தில் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
எனக்கான வாய்ப்பு வரும் போது நூறு சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டுமென முடிவு செய்தேன்.

கிரிக்கெட்டில் சிறந்த வீரரான விராட் கோலி உடன் இணைந்து பேட்டிங் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதன் மூலம் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியது. அவரோடு விளையாடுவதன் மூலம் எனது ஆட்டம் மேம்படுகிறது.
பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பயணித்தேன். தொடக்க ஆட்டக்காரராக இருந்த நான், பேட்டிங் ஆர்டரில் பல்வேறு இடங்களில் இந்த அணிகளுக்காக மாறி மாறி விளையாடினேன். அந்த அனுபவங்கள் எனது கரியரைக் கச்சிதமாக வடிவமைத்தது.
2024 சீசன் சவாலானதாக இருந்தது. அந்தச் சீசன் முடிந்ததும் நான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
கிரிக்கெட் வீரர்களின் பயணத்தில் பின்னடைவுகள் இருக்கும். அதை எப்படிக் கடக்கிறோம் என்பதுதான் முக்கியம். மீண்டும் ஆர்சிபி அணிக்குத் திரும்பியதும் எனது பேட்டிங் டெக்னிக்கில் நிறைய மாற்றங்கள் செய்தேன்.

ஆர்சிபி அணியின் வலுவான பேட்டிங் வரிசை கொடுக்கும் நம்பிக்கை காரணமாக என்னால் கேஷுவலாக விளையாட முடிகிறது. டி20 கிரிக்கெட் இப்போது மாறியுள்ளது.
அணிக்கு 20 முதல் 30 ரன்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றால் ஒரு பேட்ஸ்மேன் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்க தயங்க கூடாது எனக் கருதுகிறேன்.
வைபவ் சூர்யவன்ஷி மாதிரியான வீரர் மிகவும் ஸ்பெஷல். இந்த வயதில் அவரது பவர், அதிரடி பேட்டிங் என்னை ஈர்க்கிறது. அவர் தனித்துவ திறன் கொண்ட வீரர்” என்று பகிர்ந்திருக்கிறார்.