ஒருபக்கம் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு… இன்னொரு பக்கம் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதி இப்படித்தான் பரபரப்பாக தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் வெளியேறியதால், இந்தியாவுக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் ஷஃபாலி வர்மா.

வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட ஷஃபாலி, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஹர்மன்ப்ரீத் கவுர் 24, ரிச்சா கோஷ் 21 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் தீப்தி சர்மா 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்ததால், இந்தியா 20 ஓவர்களில் 149/6 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
இனி வங்கதேசத்தின் முறை. 150 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டி! ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் அந்தக் கனவை ஆரம்பத்திலேயே உடைக்கத் தொடங்கினர்.
வங்கதேச வீராங்கனைகளால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷோர்னா அக்டர் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேசம் 20 ஓவர்களில் 109/7 மட்டுமே எடுக்க முடிந்தது.
அவ்வளவுதான்…இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! இந்த வெற்றியின் மூலம் இந்தியா மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் ஆட்டநாயகி விருதை ஷஃபாலி வர்மா வென்றார்.
“இந்தியா பைனலுக்கு வந்தாச்சு… அடுத்த கேள்வி ஒன்றுதான் செப்டம்பர் 13-ல் கோப்பைக்காக இந்தியாவுடன் களமிறங்கப் போவது இலங்கையா? பாகிஸ்தானா? இறுதிப்போட்டியில் வென்று 8-வது முறையாக மகளிர் ஆசியக் கோப்பை பட்டத்தை இந்திய மகளிர் அணி மீண்டும் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.