கெய்க்வாட் போட்டிக்கு முன்பாக, “எங்களது பேட்டிங்கும் பௌலிங்கும் நன்றாக உள்ளது, ஃபீல்டிங்தான் 50:50 ஆக உள்ளது”, என்று கூறியிருந்தார். சிவம் துபே விட்ட கேட்சுகளை மட்டுமே மனதில் வைத்து சொன்னால் அது 10:90 என தலைகீழ் விகிதமாக இருந்திருக்கும். பந்தும் வீசுவதில்லை, ஃபீல்டிங்கும் சிறப்பாக இல்லை எனும் பட்சத்தில் அவரை சப்ஸ்ட்யூட்டாக வெளியே வைக்கும் முடிவை சிஎஸ்கே நிஜமாகவே பரிசீலிக்க வேண்டும்.
சிஎஸ்கே இறுதியில் இறுக்கிப்பிடித்த போதும் கிளாசிக்கான கிளாசனின் இன்னிங்க்ஸ் ரன்கள் வந்து கொண்டே இருப்பதை இறுதி வரை உறுதி செய்தது. 195 எட்டக்கூடிய இலக்கு என்று தோன்றினாலும் அனுமானித்ததைப் போல பக்கா பேட்டிங் பிட்சும் இல்லை, சன்ரைசர்ஸ் பந்துவீச்சும் சோடை போகாது, பனிப்பொழிவும் ஸ்பாய்லர் கேம் ஆடும் என்பது இரண்டாவது பாதியை சுவாரஸ்யமாக்கியது.

சேட்டன் வழக்கம்போல் “இன்றாவது கொஞ்ச நேரம் இருந்தால் என்ன?” என ரசிகர்களைப் பாட வைக்காத குறையாக ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரேயின் கேட்ச் மட்டும் ஆரம்பத்திலேயே விடப்படாமல் இருந்திருந்தால் சிஎஸ்கேவுக்கு முன்னுரையே முடிவுரை ஆகியிருக்கும். அது நடக்காமல் போனதால் 3 ஓவர்களிலேயே 47 ரன்களை அடித்து தனது ரசிகர்களை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொள்ள வைத்தனர்.
பக்கத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ரசிகர்களையும் சேர்த்தே கிள்ளும்படி சன்ரைசர்ஸின் பவர்பிளேயையே தூக்கிச் சாப்பிடுமளவு பவர்பிளேயில் 76 ரன்களும் வந்தாகிவிட்டது. அப்படியே நீடித்திருந்தால் 84 பந்துகளில் 119 தேவை என கூப்பிடும் தூரத்தில் தான் இலக்கு கட்டில் போட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை ஆயுஸ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டு அவர் ஓட முடியாது தடுமாறாமல் இருந்திருந்தால், அவரது விக்கெட் விழாமல் இருந்திருந்தால் இலக்கு இன்னமும் நெருக்கமாக சிஎஸ்கே கூடாரத்தில் முகாமிட்டிருக்கும்.