திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது… அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்… முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்… தவெக தலைவர் விஜய்க்குக் கொடுக்கப்பட்ட கான்வாய் வாபஸ்…
இப்படி நேற்று இரவு முதல் பல செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.
அது அத்தனைக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அந்தப் பேட்டியில் ஸ்டாலின், “தவெக தலைவர் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை எந்தத் தொந்தரவும் செய்யாமல் திமுக ஆறு மாதங்களுக்கு வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
விஜய் கூறியிருப்பது போல மகளிருக்கு ரூ.2,500 என்பது மிகவும் சிரமம். குறைந்தபட்சம் ரூ.1,000-த்தையாவது தொடர்ந்து தந்து வர வேண்டும்.
2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, நாங்கள் கொடுத்த வாக்குறுதியைப் பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம். இப்போதும் கூட, செய்ய முடியக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்தோம்.
ஆறு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம். செய்தால் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.