Doctor Vikatan: சம்மரில் கூந்தலைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

Spread the love

Doctor Vikatan: சம்மர் நாள்களில் சருமப் பராமரிப்பைப் போலவே, கூந்தல் பராமரிப்பும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. வியர்வை, அதனால் உண்டாகும் வாடை, முடி உதிர்வது என இந்த நாள்களில் நிறைய பிரச்னைகள் வருகின்றன.

சம்மரில் கூந்தல் பராமரிப்புக்கு என்ன செய்யலாம்… தினமும் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிப்பது சரியானதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகியல் ஆலோசகர் கீதா அஷோக்.

 கீதா அஷோக்
கீதா அஷோக்

தலையில் அதிகப்படியான வியர்வை படிவதால் வேர்க்கால்களில் உப்பும், அழுக்கும் படிந்து விடும். மேலும், நீர்ச்சத்து குறைந்து விடுவதால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தினசரி வெயிலில் போக வேண்டி இருந்தால் முடிந்த அளவு நல்லெண்ணெய் தடவி ஊற விட்டுக் குளிப்பது சிறந்தது.

சூரிய ஒளியால் நம் ஸ்கால்ப் பாதிக்காமல் நல்ல சன் ஸ்க்ரீனாக நல்லெண்ணெய் செயல்படும். இதைத்தான் காலங்காலமாச நாம் செய்து வருகிறோம். எண்ணெய்க் குளியல் வெயில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த கேசப் பராமரிப்பு. அதிக வியர்வை காரணமாக தலையில் ஒருவித வாடை ஏற்படும். எனவே,  தினசரி தலைக்குக் குளிப்பது  நலன் பயக்கும்.   

100 மிலி டிஸ்டில்டு வாட்டரில் 100 சொட்டுகள் லைம் ஆயில், 100 சொட்டுகள் ரோஸ் ஆயில் கலந்து கொள்ளவும். தலைக்குக் குளித்து தலை துவட்டிய பின் இந்தக் கலவையை ஸ்பிரே செய்து தலை வாரினால் தலையில் உள்ள துர்நாற்றம் போய் விடும்.

வெயிலுக்கு இதமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் இறுக்கமான  கொண்டைகளால் நிச்சயம்  பிரச்னைகள் வரும். அடியில் வியர்வை தங்கி, முடியில் உப்பு சேர்ந்து முடி அறுபடும். முடியை லேசாகத் தூக்கி க்ளிப் செய்துகொள்ளலாம். அவ்வப்போது  க்ளிப்பைக்  கழற்றிவிட்டு கூந்தலைச்  சிறிது உலர விடலாம்.

தலைக்குக் குளித்து தலை துவட்டிய பின் இந்தக் கலவையை ஸ்பிரே செய்து தலை வாரினால் தலையில் உள்ள துர்நாற்றம் போய் விடும்.

கோடைக்காலத்தில் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஊற விட்டுக் குளிப்பது சாலச்சிறந்தது.

தலைக்குக் குளிக்க வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும். அதிக சூடு முடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சீயக்காய்தான் உபயோகிக்க வேண்டும் என்றில்லை. கெமிக்கல் அதிகமில்லாத மிதமான ஷாம்பூவும் உபயோகிக்கலாம்.  தலையில் வியர்வை அதிகமாகச் சுரப்பதால் அழுக்கு படிந்து இருக்கும். வெறும் தண்ணீரில் கூந்தலை அலசினால் அந்த  அழுக்கு வெளியேறாமல் பிசுக்காகப் படியும். நாள்பட்ட பூஞ்சைத் தொற்றாக மாறி விடும். 

தினசரி ஷாம்பூ உபயோகித்துக் குளிப்பதில் தவறில்லை.  சீயக்காய், ஷாம்பூ இரண்டுமே கிளீனிங் ஏஜென்ட்டுகள்தான். தினசரி ஷாம்பூ குளியல் எடுப்போர், குளிப்பதற்கு முன் தலையில் சிறிது எண்ணெய்  வைத்துக்கொள்வது மண்டை ஓட்டு வறட்சியைத் தவிர்க்கும்.

நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பூவில் பாரபென் மற்றும் சோடியம் லாரல் சல்ஃபேட் அதிகமாக இருந்தால், கண்டிஷனர் அவசியம். கண்டிஷனர் உபயோகிக்காவிட்டால்  கூந்தல் வறண்டு உதிரக்கூடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.       

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *