தாம்பரம் – தென்காசி ரயில் வழித்தடத்தில் இரு வழி மார்க்கமாக சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையில் 6 நாட்கள் இயக்கவிருப்பதாக தென்னக ரயில்வே துறையிலிருந்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஆனால் அந்த ரயில்கள் அதிகாலை 5 மணிக்கு கிளம்புவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையின் காரணமாக நேரத்தை மாற்ற கோரிக்கை வைக்கின்றனர் தென்மாவட்ட மக்கள்.
சென்னை – செங்கோட்டை ,
இரு வழி மார்க்க வழித்தடத்தில் 50 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும் பெரும்பாலும் காத்திருப்பு பட்டியலில்தான் இருக்க வேண்டும். கொல்லம் விரைவு ரயில் ஒன்று இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இருப்புப்பாதை காலத்திலிருந்து ஓடுகிறது. அதிலும் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருந்துதான் இடம் பிடிக்க முடியும். வாரத்திற்கு மூன்று நாள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஓடுகிறது அதிலும் இதே கதைதான். அகல ரயில் பாதை போட்ட பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டுமே நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாரம் முழுவதும் சென்னை – செங்கோட்டை இருவழி மார்க்கத்தில் 2 ரயில்கள் மட்டுமே நாள்தோறும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
பயணிகள் படும்பாடு
பெரும்பாலும் பல ரயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் தீபாவளி, பொங்கல் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் அலைமோதும். ஆனால் செங்கோட்டை-சென்னை இரு வழி மார்க்க வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் எப்போதுமே கூட்டம் கடுமையாக அலைமோதும்.
இட நெருக்கடியால் சண்டைகளும் சச்சரவுகளும் பயணிகளுக்குள் இயல்பாகவே ஏற்படுவதை கண்கூடாக காணலாம். முன்பதிவு செய்து பல வாரங்களாக காத்துக் கிடந்து கடைசி நேரத்தில் ஆர்ஏசி சீட் கூட கிடைக்காமல் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு கட்டாயமாக பயணிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் பயணிகளின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும். இதனாலேயே சென்னை – செங்கோட்டை இரு வழி மார்க்கத்திலும் முன்பதிவில்லா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கின்றது.

சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக தென் மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் விடப்பட்டிருந்தாலும் அதை சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராசபாளையம்,சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி,செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்வது மிகுந்த சிரமமே. காரணம் விருதுநகர் ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் அருகருகே இல்லை. மேலும் விருதுநகரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நள்ளிரவில் பேருந்து போக்குவரத்து வசதியும் கிடையாது.